தன்னுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த ஆடவரை குக்ரி கத்தியால் குத்திய டியோ கோக் யுங்கிற்கு ஓராண்டு, பத்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வேண்டுமென்றே காயப்படுத்தியது, போதைப்பொருள் பயன்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளையும் 35 வயது டியோ ஒப்புக்கொண்டார். தண்டனை விதிக்கும்போது மேலும் ஒரு குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
ஆடவர் போதைப்பொருளைப் பயன்படுத்தப் பழக்கிவிட்டதால் அவர்மீது கோபமடைந்ததாகவும் பழிவாங்க நினைத்துக் குத்தியதாகவும் டியோ கூறினார். ஆனால் ஆடவரைக் கொல்வது தமது நோக்கமல்ல என்றார் அவர்.
சம்பவத்தில் காயமடைந்த ஆடவருக்கு நெஞ்சு, முதுகு, வயிறு, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதுடன் நுரையீரலும் செயலிழந்தது.
அபாயகரமான ஆயுதத்தால் தாக்கிய குற்றத்துக்கு டியோவிற்கு பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் பிரம்படியும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்கு ஓராண்டிற்கும் பத்து ஆண்டுகளுக்கும் இடையிலான சிறையுடன் இருபதாயிரம் வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.