சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (எஸ்எம்யு) பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கான புதிய கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பங்களிப்பிலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் 'ஜேஎல்எஃப்ஓ-எல்எச்எஃப்' கல்வி உதவித் தொகைக்குத் தகுதிபெறுவர்.
மூன்று மில்லியன் வெள்ளி மதிப்புமிக்க இந்த கல்வி உதவித்தொகையை லிம் ஹூன் அறநிறுவனம் வழங்குகிறது. ஜேஎல் குடும்ப அலுவலகத்தின்கீழான தனியார் அறநிறுவனம் அது.
இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் பெறும் தொகையை மாணவர்கள் தங்களது வருடாந்தர கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும் கல்வி சார்ந்த இதர செலவுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தகுதிபெறும் ஒவ்வொரு மாணவருக்கும், பல்கலைக்கழகத்தில் பயிலும் நான்கு ஆண்டுகளுக்கும் ஆண்டுக்குப் பத்தாயிரம் வெள்ளி நிபந்தனையற்ற கல்வி உபகாரச் சம்பளமாக வழங்கப்படும்.
முதலில் இந்த ஆண்டு ஒன்பது மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பல்கலையில் தற்போது பயிலும் மாணவர்களும் வரும் ஆகஸ்ட் மாதம் பட்டப் படிப்பைத் தொடங்க இருக்கும் புதிய மாணவர்களும் இவர்களில் அடங்குவர்.
எதிர்வரும் ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், எல்எச்எஃப் அறநிறுவனத்தின் இயக்குநர் திரு ஏண்டி லிம், மூன்று மில்லியன் வெள்ளிக்கான காசோலையை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் தலைவர் லில்லி கோங்கிடம் வழங்கினார். சிறந்த எதிர்காலத்திற்கு கல்வியே அடிப்படை என்று நம்புவதாக திரு லிம் கூறினார்.