பக்கவாதத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணை மானபங்கப்படுத்திய துப்புரவாளருக்கு நேற்று இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
56 வயதான அந்த ஆடவர் மார்ச் 23ஆம் தேதி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட நோயாளியின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அவரது பெயரையோ மருத்துவமனையின் பெயரையோ வெளியிட அனுமதி இல்லை.
ஆடவர் சென்ற ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பக்கத்துப் படுக்கையில் இருந்த நோயாளிக்கு சிகிச்சையை முடித்து திரையை அகற்றிய தாதி ஆடவர் அந்தப் பெண்ணைத் தொடுவதைக் கண்டு அதட்டினார்.
தடுப்புக் காவலில் இருந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது தண்டனைக் காலம் சென்ற ஆண்டு அக்டோபரில் இருந்து கணக்கிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

