ஊழியர்கள் அனைவரும் இனிமேல் வேலையிடத்திற்குத் திரும்பலாம். என்றாலும்கூட ஊழியர்களுக்குத் தொடர்ந்து நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைச் செய்து தரும்படி முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
கொவிட்-19 தொடர்பான வேலை யிட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, வேலையிடங்களுக்கு ஊழியர்களை மாற்று நேரங்களில் வரச்செய்வது போன்ற ஏற்பாடுகள் நிரந்தரமாக வேண்டும் என்று மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகிய முத்தரப்பு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து உள்ளன.
இந்த வேலை கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்தால் அது ஆற்றல்மிகு ஊழியர்களைப் பெற நிறுவனங்களுக்கு உதவுவதாக இருக்கும் என்பதை அந்த முத்தரப்பு அமைப்புகள் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
தொலைதூரத்தில் இருந்து வேலை பார்க்க இயலாத முன்களப் பணியாளர்களுக்குத் தோதாக பகுதிநேர வேலை, அப்போதைக்கு அப்போது வேலை போன்ற நடைமுறைகளும் பரிசீலிக்கத்தக்கவை என்று அவை தெரிவித்தன.
இதனால் இத்தகைய ஊழியர்கள் வேலைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் செம்மையாக நிறைவேற்ற முடியும் என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.
உலகம் முழுவதும் பார்க்கையில், முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைக் கைக்கொள்கிறார்கள் என்பது தெரியவருகிறது. நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகள் காரணமாக வேலை, வாழ்க்கை இரண்டுக்கும் இடையில் நல்ல சமநிலையை ஊழியர்கள் காண முடிகிறது.
வேலையில் ஊழியர்கள் அதிக ஈடுபாடு காட்டவும் ஊழியர் அணியின் உற்பத்தித்திறன் பெருகவும் இத்தகைய ஏற்பாடுகள் உதவுகின்றன என்பதை இந்த மூன்று அமைப்புகளின் அறிக்கை சுட்டிக் காட்டியது. இது முதலாளிகளுக்கு பலன் அளிக்கும் என்பதையும் அறிக்கை குறிப்பிட்டது.
நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் தலைசிறந்த முறையில் உதவக்கூடிய நீக்குப்போக்கான வேலைநேர ஏற்பாடுகள் பற்றி முடிவு செய்வதில் ஊழியர்களைக் காலக்கிரம முறைப்படி முதலாளிகள் ஈடுபடுத்தி வரவேண்டும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.