மத்திய சேமநிதி உறுப்பினர்களின் 'எல்டர்ஷீல்டு' காப்புறுதித் திட்டம் முடித்துக்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி உண்மை என்று மத்திய சேமநிதிக் கழகம் தெரிவித்துள்ளது.
உறுப்பினர்களின் எல்டர்ஷீல்டு காப்புறுதித் திட்டம் முடித்துக் கொள்ளப்பட்டு அவர்கள் கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு உள்ளனர் என்பதைத் தெரிவிப்பதற்காகவே அந்தக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக கேள்விக்கு அளித்த பதிலில் கழகம் கூறியது.
கழகம் அனுப்பிய அந்தக் குறுஞ்செய்தி, அதைப் பெற்ற சிலரிடத்தில் சந்தேகத்தை, கவலையை ஏற்படுத்திவிட்டது.
அது மோசடி செய்தியாக இருக்குமோ என்றுகூட இணையப் புழங்கிகள் சந்தேகம் கிளப்பினர்.
கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் 2020 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட காப்புறுதித் திட்டம்.
ஒருவர், சுயமாக குறைந்தபட்சம் மூன்று அன்றாட செயல்களில் ஈடுபட இயலாமல் போகும் அளவுக்குப் பாதிக்கப்படும்பட்சத்தில் அவருக்கு அந்தத் திட்டம் மாதாமாதம் பணம் கொடுக்கும்.

