வேலை இடத்திற்குத் திரும்பும் ஊழியர்கள், வேலை இடத்தில் முகக்கவசத்தை அணிந்தபடியே இருப்பது சிரமமானது என்பதால் முகக்கவசத்தை அகற்றிவிட அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
வேலை இடத்தில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி அகற்றப்படும் போதிலும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் ஊழியர்கள் கவனமாக இருந்துவர வேண்டும் என்று கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங் கூறினார்.
இந்தப் பணிக்குழு வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்காவில் இருந்தபடி காணொளி மூலம் பேசிய அமைச்சர், வேலை இடத்தில் முகக்கவசம் இல்லாமல் இருக்கும்போது சக ஊழியர்களுடன் நெருக்கமாக இல்லாமல் விலகி இருந்து பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்; கூட்டமான இடத்தைத் தவிர்த்துவிடுங்கள் என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் எஞ்சி இருக்கும் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை அகற்றப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வேலை இடத்திற்குத் திரும்ப ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரம்பு அளவு அகற்றப்பட்டு இனி எல்லா ஊழியர்களும் வேலை இடம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
இருந்தாலும் வேலை இடங்களில் முகக்கவசத்தை அகற்ற இரண்டு நிபந்தனைகள் இருக்கும்.
ஊழியர்கள் சக ஊழியர்களுடன் நேரடியாக அணுக்கத் தொடர்பில் இல்லாதபோது முகக்கவசத்தை அகற்றலாம். வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்கும் இடத்தில் அவர்கள் இல்லை எனில் முகக் கவசம் தேவையிராது.
இதனிடையே, சிங்கப்பூரில் மார்ச் 29ஆம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு கொவிட்-19 தொற்று பெரிதும் அதிகரிக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பணிக்குழுவிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த பணிக்குழுவின் மற்றோர் இணைத் தலைவரான சுகாதார அமைச்சர் ஓங் யி காங், உலகச் சாதனையாக சிங்கப்பூரில் அதிக மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது முதல் காரணம் என்றார். நாட்டின் ஒட்டுமொத்த மீள்திறன் அதிகமாகி இருக்கிறது என்பது இரண்டாவது காரணம்.
விதிகளை மீறாமல் நடந்துகொண்டு ஒரே சமூகமாக சிங்கப்பூர் ஒத்துழைத்து இருப்பது இதற்கான மூன்றாவது காரணம் என்று சுகாதார அமைச்சர் விளக்கினார்.
அதே கூட்டத்தில் பேசிய பணிக்குழுவின் மூன்றாவது இணைத் தலைவரான வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், சிங்கப்பூரர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இதில் முக்கியமானவை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
அதோடு, தேசிய முறையில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் அதற்கான காரணம் என்று அவர் தெரிவித்தார்.
இருந்தாலும் இதில் மெத்தனப்போக்கு கூடாது என்று திரு கான் வலியுறுத்தினார்.

