சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அண்மைய வாரங்களில் சீராகக் குறைந்து வருவதை அடுத்து வரும் மாதங்களில் மேலும் பல தடுப்பூசி நிலையங்கள் செயல்படமாட்டா என்று சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இருபது நிலையங்கள் வரும் மே மாதம் இறுதிவரை செயல்படும். இதர ஆறு நிலையங்கள் ஜூன் இறுதிவரை செயல்படும் என்று அமைச்சு கூறியது.
மரின் பரேட் சமூக மன்றத்தில் செயல்படும் ஒரு நிலையம் இந்த மாதத்துடன் மூடப்படும் என்று அமைச்சின் இணையத்தளம் தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் முழுவதும் இப்போது 29 தடுப்பூசி நிலையங்கள் செயல்படுகின்றன.
அமைச்சு தன்னுடைய வளங்களைப் பல கூட்டு பரிசோதனை மற்றும் தடுப்பூசி நிலையங்களாக ஒன்று திரட்டும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும்.
இது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த வியாழக் கிழமை நிலவரப்படி மக்கள் தொகையில் கொவிட்-19க்கு எதிரான முதலிரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களின் விகிதம் 92%க்கும் அதிகம். 73 விழுக்காட்டினர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.