கடைத்தொகுதி முற்றத்தில் பொருள்களைக் குவித்து வியாபாரம் நடத்த மீண்டும் அனுமதி கிடைத்தது பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவ்வாறு மகிழ்வைப் பகிர்ந்துகொண்டோ ரில் மஷிடா அப்துல்லாவும் ஒருவர்.
'லவேரா எஸ்ஜி' என்னும் பெயரில் மாவுப் பண்டங்களை விற்கும் இவர், செங்காங்கில் கொம்பாஸ் ஒன் கடைத்தொகுதியில் நடைபெற்று வரும் விற்பனைச் சந்தையில் பங்கேற்றுள்ளார்.
முதல் நாள் விற்பனையில் பெருமளவில் வாடிக்கையாளர்கள் திரண்டு வந்தது இன்ப அதிர்ச்சியைத் தந்ததாக திருவாட்டி மஷிடா, 37, தமது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளார். கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இணையம் வழியாக தாம் விற்றுவந்த கேக்குகளை மக்கள் நேரடியாக இப்போது வாங்குவதைக் காண்பதைக் கண்டதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் விற்பனையில் கிருமிப் பரவல் கால விற்பனையைக் காட்டிலும் 30 விழுக்காடு அதிகம் நடைபெற்றதாகக் கூறும் இவர் சருமப் பராமரிப்புப் பொருள்களையும் விற்கிறார்.
மற்றொரு வியாபாரியான லிம் சிம் வான், 65, கடைத்தொகுதி சந்தை வியாபாரம் திரும்பி வந்ததன் மூலம் அதிக வாடிக்கையாளர்களைப் பெறமுடியும் என்றார். எல்இடி பல்பு போன்ற பொருள்களை இவர் விற்றுவருகிறார்.
நொவினா ஸ்குவேர், செஞ்சுரி ஸ்குவேர், சிட்டி ஸ்குவேர் மால், தக்கச்சிமாயா மற்றும் கிரோட் வோர்ல்ட் சிட்டி போன்ற கடைத்தொகுதிகளிலும் மீண்டும் தொடங்கி நடந்து வரும் சந்தை வியாபாரத்தை 'சண்டே டைம்ஸ்' செய்தியாளர் இரு நாள்கள் கண்டு வந்தார்.

