சில நிறுவனங்கள் வாரந்தோறும் பல நாள்களில் தங்களின் ஊழியர்களை வேலையிடத்திற்கு வரச் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வாரந்தோறும் இரண்டு முறை தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று 'ரேண்ட்ஸ்டாட் சிங்கப்பூர்' வேலை வாய்ப்பு நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது. ஊழியர்கள் உள்ள குழுக்கள், அவர்களின் வேலை ஆகியவற்றைப் பொருத்து இதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே 227 ஊழியர்களைக் கொண்ட 'ரேண்ட்ஸ்டாட்' வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையை முழுமையாகச் செயல்படுத்தி வந்துள்ளது.
'எல்சர்' விளையாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமும் வாரத்திற்கு மூன்று முறையாவது தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வைக்கத் திட்டமிட்டுள்ளது. ஊழியர்களுக்கிடையே உறவை வலுப்படுத்த இவ்வாறு செய்வதாக அது கூறியது.
எனினும், ஊழியர்களை அவசரப்பட்டு உடனேயே வேலையிடத்திற்கு வரச் சொல்லக்கூடாது என்று சில வர்த்தகத் தலைவர்களும் மனிதவள அதிகாரிகளும் எச்சரிக்கின்றனர். ஈராண்டுகளாக வீட்டில் வேலை செய்து பழக்கப்பட்ட ஊழியர்கள் மாற்றத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள நேரம் வழங்கவேண்டும் என்பது அவர்களின் கருத்து.

