உலகப் பொருளியல் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. வேகமாக மாறி வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய வாய்ப்புகளைத் தலைசிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் பாடுபடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூர் பொருளியல் 2030 இலக்கு, தொழில்துறை உருமாற்ற வழிகாட்டித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதோடு மட்டுமின்றி, தன்னுடைய வர்த்தகப் பங்காளிகளை இருதரப்பு, பலதரப்பு உடன்பாடுகள் அடங்கிய ஒரு கட்டமைப்பின் வழியாக ஈடுபடுத்தி சவால்களை அரசாங்கம் சமாளித்து வருவதாகவும் திரு கான் தெரிவித்தார்.
இருந்தாலும் இந்த உத்திகளின், வர்த்தக உடன்பாடுகளின் வெற்றி என்பது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நிறுவனங்கள் எந்த அளவுக்கு விடாப்பிடியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையே சார்ந்திருக்கும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துடன் சேர்ந்து நேற்று சன்டெக் ஹைபிரிட் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் நடந்த வர்த்தக, தொழில் அமைச்சின் ஆய்வரங்கில் அமைச்சர் பேசினார். நிறுவனங்களும் தொழில்துறைகளும் அடித்தள அளவில் உருமாற வேண்டும். மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தொழில்களை ஏற்படுத்தித் தரக்கூடிய வலுவான சிங்கப்பூர் நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்றார் திரு கான். செலவுகள் கூடுகின்றன. நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சரியான தேர்ச்சியுடன் கூடிய ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. இத்தகைய ஒரு நேரத்தில் உருமாற்றம் தேவைதானா என்றும் சில நிறுவனங்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றன என்பதைத் திரு கான் சுட்டினார்.
உண்மையில் பார்க்கப்போனால், புத்தாக்கம், உருமாற்றங்களில் முழுமூச்சாக முன்னேற்றத்தைச் சாதித்தால்தான் இத்தகைய சவால்களை நிலையான முறையில் சமாளிக்க முடியும் என்று திரு கான் கூறினார்.
உலக நிலவரம் நிச்சயமில்லாமல் உள்ளது. பணவீக்கம் கொஞ்ச காலத்திற்கு நீடிக்கும். விநியோகக் கட்டமைப்பு இறுக்கமாகவே இருக்கும். புவி சார்ந்த அரசியல் நிலவரங்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதை அவர் ஒப்புகொண்டார்.
இருந்தாலும் உலகப் பொருளியலுக்கு மறுவடிவம் கொடுக்கும் நீண்டகால போக்குகளையும் உருமாற்றங்களையும் நிறுவனங்கள் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டியது அவசியம் என்று திரு கான் வலியுறுத்திக் கூறினார்.
சவால்கள் அதிகரித்து வரும் சூழலில் தொடர்ந்து நாம் பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டு வருகிறோம் என்ற அமைச்சர், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய நல்ல நிலையில் சிங்கப்பூர் உள்ளது என்றார்.
மனிதவள அமைச்சு, பொருளியல் வளர்ச்சிக் கழகம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவை 2030 இலக்கையொட்டிய தங்கள் செயல்திட்டங்களையும் முயற்சிகளையும் அந்தக் கருத் தரங்கில் எடுத்துரைத்தன.

