மோசடிக்காரர்களிடம் பறிபோக இருந்த ஏறத்தாழ $200 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடித் தடுப்பு நிலையம் மீட்டுள்ளது.
தற்போது மோசடி குறித்து புகார் செய்யப்படுவதற்கு முன்பே
மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொள்கின்றனர்.
கடந்த மாதம் 27,300 வங்கிக் கணக்குகளை முடக்கி $200
மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடித் தடுப்பு நிலையம் மீட்டதாக காவல்துறை பணித்திட்டக் கருத்தரங்கில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
நிதி மீட்பு தொடர்ந்து முக்கியமானதாக இருக்கும்போதிலும் மோசடிக் குற்றங்கள் நிகழ்வதற்கு முன் அவற்றைத் தடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவர் என்று அறிவிக்கப்பட்டது.
காவல்துறையின் ஏழு நிலப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் மோசடி தடுப்புக் குழு உள்ளது.
அக்குழுக்களில் இதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் இடம்பெறுகின்றனர்.
மோசடிக் குற்றங்களை எதிர்கொள்வதில் அவர்களுக்கு அனு
பவம் உள்ளது.
மோசடித் தடுப்பு நிலையம் 2019ஆம் ஆண்டில் வர்த்தக விவகாரத் துறையின்கீழ் உள்ள நிபுணத்துவப் பிரிவாக அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மோசடித் தடுப்புப் பிரிவு நிறுவப்பட்டது. வர்த்தக விவகாரத் துறையின்கீழ் அனைத்து மோசடித் தடுப்புப் பிரிவுகளும் கொண்டுவரப்பட்டன.
கடந்த மாதம் இப்பிரிவு மோசடித் தடுப்பு தளபத்தியமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தத் தளபத்தியம் மோசடிகளை முறியடிக்க ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளை நடத்துகிறது.
ஒருவர் மோசடிக்காரர்கள் விரித்த வலைக்குள் விழுவதற்கு முன்பே தளபத்தியத்திற்கு எச்சரிக்கை ஒலி எழுப்பக்கூடிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசடிக் குற்றங்கள் தொடர்ந்து கவலை அளிப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார். கடந்த ஓர் ஆண்டில் மோசடிக் குற்றங்கள் 52 விழுக்காடு அதிகரித்ததை அவர் சுட்டினார்.
"புதிய குற்றப் போக்குகளை எதிர்கொள்ள காவல்துறை அதன் வளங்களை மறுசீரமைக்கிறது. அனைத்து வகை மோசடிகளுக்கான விசாரணையை மோசடித் தடுப்புத் தளபத்தியம் ஒரே பிரிவின்கீழ் கொண்டு வருகிறது.
"இதன் மூலம் மோசடிகளுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்கலாம்," என்றார் அவர்.

