சிங்கப்பூரில் நேற்று முதல் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டன.
அத்துடன் 'டோர்ஸ்கோன்' எச்சரிக்கை குறியீடு ஆரஞ்சு நிறுத்திலிருந்து மஞ்சள் நிறத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்கீழ், ஒன்று கூடல்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையில் வரம்பு இல்லை.
பாதுகாப்பு இடைவெளி அணுகு முறை இனி கட்டாயமானதல்ல.
வேலையிடங்களுக்கு அனைத்து ஊழியர்களும் திரும்பலாம்.
பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் நாளான நேற்று, மத்திய வர்த்தக வட்டாரம் கிட்டத்தட்ட வழக்கநிலைக்குத் திரும்பியது.
அலுவலகக் கட்டடங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றுக்குள் நுழைய வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படவில்லை.
இருப்பினும், கடைத்தொகுதிகள், திரையரங்குகள், உணவு மற்றும் பானக் கடைகள் போன்ற உட்புறங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
உணவருந்தபோது மட்டுமே முகக்கவசத்தை அகற்றலாம். உணவு சாப்பிட்டதும் உடனடியாக முகக்கவசத்தை அணிந்துக்கொள்ள வேண்டும்.
திருமணம், கலைநிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் 500 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் தடுப்பூசி அடிப்படையிலான கட்டுப்பாடுகளின்கீழ் நடைமுறைப்
படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். டோர்ஸ்கோன் எச்சரிக்கை குறியீடு மஞ்சள் நிறத்துக்குக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் உணவு, பானக் கடைகளில் 'சியர்ஸ்' செய்துகொள்ளலாம்.
உணவு, பானக் கடைகளில் பாதுகாப்பு இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்கத் தேவைஇல்லை.
இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே உணவு, பானக் கடைகளில் உணவருந்தலாம். இதுதொடர்பாக, ஆங்காங்கே சோதனைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் இனி பாதுகாப்பு இடைவெளி விதிமுறையைக் கடைப்
பிடிக்கத் தேவையில்லை.
உள்ளரங்குகள், வெளிப்புறங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையில் வரம்பு இல்லை.
பார்வையாளர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அதுமட்டுமல்லாது, நிகழ்ச்சிகளில் உணவு, பான விற்பனைக்கு அனுமதி உண்டு. இது அந்தந்த இடங்
களின் விதிமுறையைப் பொறுத்தது. விளையாட்டு நிகழ்வுகளில் உணவு, பானங்களுக்கு அனுமதி உண்டு.
முன்பதிவு இல்லாமல் ஆக்டிவ்எஸ்ஜிக்குச் சொந்தமான நீச்சல் குளத்துக்குச் சென்று நீந்தலாம். அதேபோல முன்பதிவு இன்றி ஆக்டிவ்எஸ்ஜியின் உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடற்பயிற்சி யில் ஈடுபடலாம். இருப்பினும், ஆக்டிவ்எஸ்ஜிக்குச் சொந்தமான விளையாட்டு அரங்குகளைப் பயன்படுத்த விரும்புவோர் முன்
பதிவு செய்ய வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு இடைவெளியை இனி கடைப்பிடிக்கத் தேவையில்லை. அவ்விடங்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உணவைப் பொட்டலம் கட்டத் தேவையில்லை. சமய வகுப்புகளில் முகக்கசவம் அணிந்துகொண்டு பாடலாம்.
பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. புஃபே எனப்படும் சொந்தமாக உணவைப் பரிமாறிக்கொள்ளும் முறைக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் உணவைப் பரிமாறும் ஊழியர்
களால் மட்டுமே உணவு பரிமாறப்பட வேண்டும்.
இரவுவிடுதிகள், கேளிக்கைவிடுதிகள் போன்ற இடங்களில் நடனம் ஆட விரும்புபவர்கள் ஏஆர்டி கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு கிருமித்தொற்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். நடனம் ஆடும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

