கட்டுமானத் துறையில் வேலை செய்து வந்த 30 வயது அமீருக்கு (புனைப்பெயர்), உரிமமின்றி கடன் கொடுத்த குற்றத்திற்காக மூவாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் அவர் வேலையை இழந்தார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தனக்கு வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை இருக்கும் அத்தகையோருக்கு உதவ திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் சிறைக் கைதிகளுக்காக வழங்கப்படும் துல்லியப் பொறியியல் பயிற்சியை அமீர் உள்ளிட்ட அனைத்து 17 கைதிகளும் வெற்றிகரமாக முடித்தனர். சிங்கப்பூர் துல்லியப் பொறியியல், தொழில்நுட்பச் சங்கத்தின் உறுப்பினர்கள் கைதிகளுக்குத் தகுந்த வேலை கொடுப்பர்.
'டிஏபி அண்ட் குரோ' எனும் 'பயிற்சி, வேலை வாய்ப்புடன் வளர்ச்சி' எனும் பாடத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் துல்லியப் பொறியியல் பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்ட சிறைக் கைதிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி சாங்கி சிறைச்சாலை நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் உள்துறை, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இத்திட்டம் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 'வைஆர்எஸ்ஜி' எனும் 'மஞ்சள் நாடா சிங்கப்பூர்' இயக்கம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள், சமூகப் பங்காளிகள் ஆகியவற்றுடன் இணைந்து சிறையில் பயிற்சிக் கழகங்களை அமைத்து வருகிறது.

