போதைப்பொருள் கடத்தலுக்காக நாகேந்திரன் கே, தர்மலிங்கம், 33, என்னும் மலேசியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனின் ஈடுபாடு குறித்து சிங்கப்பூருக்கு உள்ளேயும் வெளியேயும் தனிப்பட்டவர்களும் குழுக்களும் அவமதிக்கும் வகையிலான பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக சிங்கப்பூரின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் (ஏஜிசி) தெரிவித்து உள்ளது.
நாகேந்திரனுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த அலுவலகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ
மதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவோர் செயலையும் தான் கடுமையாகக் கருதுவதாகவும் நீதி நிர்வாகத்தைக் காக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்றும் அந்த அறிக்கையில் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் எச்சரித்துள்ளது.
நாகேந்திரனின் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்த இறுதி நேரத்தில் அவரது தாயார் திருமதி பாஞ்சாலை சுப்பிரமணியம் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்த மனுவில் பொய்யான குற்றச்சாட்டுகள் காணப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
மேலும், இந்த மனு நீதிமன்ற நடைமுறையை அவமதிக்கும் வகையிலும் சட்டப்படியான தண்டனையை நிறைவேற்றுவதில் நியாயமற்ற வகையில் தாமதத்தை ஏற்
படுத்துவதாகவும் இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
"திருமதி பாஞ்சாலைக்கு மனுவைத் தயாரித்துக் கொடுத்தவர்கள் தலைமை நீதிபதி மேனன் தமது வழக்கை விசாரிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என நாகேந்திரன் கூறியிருந்ததை வேண்டுமென்றே அந்த அம்மையாரிடம் தெரிவிக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது," எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

