கடந்த 2020ஆம் ஆண்டு சட்டக்கல்வித் தேர்வில் ஏமாற்றிய ஆறு பயிற்சி வழக்கறிஞர்களின் பெயர்களை வெளியிட உயர் நீதிமன்ற நீதிபதி சூ ஹான் டெக் முடிவெடுத்துள்ளார். ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று நீதிபதி முதலில் முடிவெடுத்திருந்தார். ஆனால் ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று தலைமைச் சட்ட அதிகாரி விண்ணப்பம் செய்ததை அடுத்து நீதிபதி தமது முடிவை மாற்றிக்கொண்டார்.
"தேர்வில் ஏமாற்றியவர்களின் பெயர்களை வெளியிடாமல் இருந்தால் அமைதியான முறையில் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று முதலில் கருதினேன். ஆனால் தற்போது அவர்களது பெயர்களை வெளியிடுவதுதான் சரியான முடிவு என்று தீர்மானித்துள்ளேன்.
மோனிஷா தேவராஜ், குஷால் அட்டுல் ஷா, ஸ்ரீராம் ரவீந்திரன், லின் குவேக் யி டிங், மேத்யூ சாய் ஜுன் ஃபெங், லயனல் வோங் சூங் யூங் ஆகியோர் தேர்வில் ஏமாற்றிய பயிற்சி வழக்கறிஞர்கள்.
வழக்கறிஞர்களாகத் தங்களை அங்கீகரிக்க இந்த ஆறு பேரும் சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை தலைமைச் சட்ட அதிகாரி ஏற்க மறுத்தார். இதனால் அவர்களது விண்ணப்பங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த ஆறு பேரில் ஐவரின் விண்ணப்பங்கள் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒருவரின் விண்ணப்பம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு பேருக்கும் இன்னொரு வாய்ப்பு தரவும் அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்
படக்கூடும் என்று கருதியும் அவர்
களது பெயர்களை வெளியிட வேண்டாம் என்று நீதிபதி முதலில் நினைத்தார்.
ஆனால் இது சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தேர்வில் ஏமாற்றிய பயிற்சி வழக்கறிஞர்கள் எவ்வித தண்டனையும் இன்றி தப்பித்துவிடுவர் என்று குரல்கள் எழுந்தன.
"உணர்ச்சிவசப்பட்டு தலை
யிடும்போது இரண்டாவது வாய்ப்பு தருவது குறித்த புரிந்துணர்வை அது மழுங்கடித்துவிடும். இரண்டாவது வாய்ப்பு தருவது குறித்து ஒவ்வொருவரின் நிலைப்பாடு மாறுகிறது. சிலருக்கு அதில் நம்பிக்கை உண்டு. சிலருக்கு இல்லை.
"இரண்டாவது வாய்ப்பு தேவைப்படுபவர்களும் உள்ளனர். அதைக் கொடுப்பவர்களும் உள்ளனர். ஆனால் இந்த இருதரப்பினருக்கும் இடையே இருக்கும் பிரிவினர் யாருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கலாம் யாருக்குத் தரக்கூடாது என்ற நீண்ட விவாதத்தை முன்வைக்கின்றனர். இதற்கு முடிவே கிடையாது," என்று நீதிபதி சூ நேற்று தெரிவித்தார்.

