மனிதவளப் பற்றாக்குறை நீண்டகால அடிப்படையில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு சவாலாக விளங்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தலைவர் ராபர்ட் யாப் தமது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான நெருக்கடி குறுகிய கால அடிப்படையில் சிங்கப்பூரின் பொருளியலை பாதிக்கும் என்றாலும் மனிதவள நெருக்கடியின் தாக்கம் நீண்டகால சவால்களை உருவாக்கக்கூடும் என்றார் அவர்.
"மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்க முதலாளிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைகளை மாற்றி வடிவமைக்கலாம்; ஊழியர்கள் அதற்கு ஏற்ற திறன்களைப் பெற உதவலாம்," என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் சிங்கப்பூர் அதன் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து கிடைப்பதும் முக்கியம் என்றார் திரு யாப். திறன் இடைவெளியைக் குறைத்து, நாட்டின் பொருளியலை உலகளவில் ஆக உயர்ந்த போட்டித்தன்மையுடன் வைத்திருக்க இது உதவும் என்றார் அவர்.
"கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து மனிதவள நெருக்கடி மேலும் மோசமடையலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே பொருளியல் வளர்ச்சியைத் தக்கவைக்கும் பொருட்டு நிறுவனங்கள், தொழிலாளர் சங்கங்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்று திரு யாப் கூறினார்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேலைகளை மாற்றி வடிவமைத்தால் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறிய அவர், உற்பத்தித் தீர்வுகள் மானியத்தைப் பயன்படுத்தும்படி நிறுவனங்களை ஊக்குவித்தார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கத் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதற்கான செலவில் 80 விழுக்காடு வரை இந்த மானியத்தின் மூலம் பெற முடியும் என்பதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் அதன் முத்தரப்புப் பங்காளிகளான தொழிலாளர் சங்கங்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து வேலையிடங்களை மேம்படுத்தவும் ஊழியர் நலனுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.

