செம்ப்மரீன் நிறுவனத்தின் பங்கு விலை நேற்று 19 விழுக்காடுவரை சரிந்தது. அதே வேளையில், கெப்பல் நிறுவனத்தின் பங்கு விலை 3.8 விழுக்காடுவரை அதிகரித்தது.
கெப்பல் நிறுவனத்தின் கடல், கடலோரப் பிரிவுடன் செம்ப்மரீன் இணையப்போவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செம்ப்மரீன் நிறுவனத்தின் பங்கு விலை சரிவைச் சந்தித்தது.
செம்ப்மரீன், கெப்பலின் கடல், கடலோரப் பிரிவு ஆகிய இரண்டும் இணைந்த பிறகு உருவாகும் புதிய நிறுவனம், உலகின் ஆகப் பெரிய கடலோர எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்தின் மதிப்பு 8.7 பில்லியன் வெள்ளி.
இந்த இரு நிறுவனங்களும் இணைவது கெப்பலுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

