கனரக லாரி ஒன்று ஏறியதால் 39 வயது இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். ஈசூன் தொழில்துறை வட்டாரம் ஸ்திரீட் ஒன்றில் நேற்று முன்தினம் இந்த வேலையிட விபத்து நிகழ்ந்தது.
மேடாக இருந்த பகுதியில் அந்த ஊழியர் 'பிரைம் மூவர்' எனப்படும் கனரக லாரியை நிறுத்தி வைத்து அதிலிருந்து வெளியேறியிருக்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த லாரி நகரத் தொடங்கியதாகவும் லாரியை நோக்கி ஓடிய ஊழியர் மீது அது ஏறியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு மனிதவள அமைச்சு பதிலளித்தது.
நேற்று முன்தினம் காலை எட்டு மணியளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் நிகழ்ந்த மற்றொரு வேலையிட விபத்தில் பங்ளாதேஷைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் மாண்டார். அச்சம்பவம் பூன் லேயில் உள்ள நேத்தல் ரோட்டில் நிகழ்ந்தது.
'ஸ்டீல் பீம்' எனும் எஃகு கம்பியை மாற்றி வைக்கும்போது அது அவரின் தலையில் விழுந்ததால் அந்த ஊழியர் மாண்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. இதன் தொடர்பில் கவனமின்றி செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 49 வயது ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.