கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் வாசிகளைச் சார்ந்திருக்கும் துறைகள் ஒருவழியாகப் புத்துயிர் பெற்றுள்ளதென சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனினும், உற்பத்தி, தகவல், தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் சுருங்கின.
சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் உள்ளூர்வாசிகளை நம்பியிருந்த நடவடிக்கைகள் களையிழந்து காணப்பட்டன. கிருமிப் பரவல் விதிமுறைகள் அடிக்கடி முடுக்கிவிடப்பட்டது இதற்குக் காரணம்.
எனினும், சென்ற ஆண்டு இறுதியிலிருந்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து உணவு, பானத் துறையில் விற்பனை சூடுபிடித்தது. இவ்வாண்டு இத்துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது.
உணவகங்கள், உணவு விநியோகச் சேவைகள் ஆகிய இரு வகை வர்த்தகங்களுக்கும் விற்பனை சூடுபிடித்தது.
இவ்வாண்டு முதல் காலாண்டில் போக்குவரத்துத் துறை வளர்ச்சி கண்டது. கூடுதலானோர் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தி வருவதால் இத்துறை வளர்ச்சி கண்டுள்ளது.
முதல் காலாண்டில் வீட்டிலிருந்து வேலை பார்த்தோரில் பாதி பேர் வரை மீண்டும் வேலையிடத்திற்குத் திரும்பியது இதற்குக் காரணம்.
கிருமிப் பரவல் சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த கட்டுமானத் துறையும் இவ்வாண்டின் முதல் காலாண்டில் மீண்டும் வளர்ச்சி கண்டது.

