சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வரி செலுத்தப்படாத 4,500 சிகரெட்டு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்பில் இரண்டு சிங்கப்பூரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
புதன்கிழமையன்று தோ பாயோ லோரோங் 8ல் அமைந்துள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் இரு ஆடவர்கள் ஒரு காருக்கும் ஒரு லாரிக்கும் இடையே பொட்டிகளை இடமாற்றுவதை அதிகாரிகள் கண்டனர். சோதனை நடத்தியதில் இரண்டு வாகனங்களில் 4,540 கள்ளச் சிகரெட் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு ஒரு பொட்டலத்தில் போதைப் பொருள் என நம்பப்படும் வெள்ளை தூளும் கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்த மேல் விசாரணை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவுடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சிகரெட்டுகளை இறக்குமதி செய்வதற்கான 516,000 வெள்ளி வரியும் 39,00 வெள்ளி பொருள், சேவை வரியும் செலுத்தப்படவில்லை.
வரி செலுத்தப்படாத பொருள்களை வாங்குவது, விற்பது, விநியோகிப்பது, சேர்த்து வைப்பது உள்ளிட்டவை சுங்கத்துறை சட்டம், பொருள், சேவை வரிச் சட்டம் ஆகியவற்றின்கீழ் மோசமான குற்றங்களாகும்.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு சம்பந்தப்பட்ட பொருள்களுக்குச் செலுத்தவேண்டிய வரிக் கட்டணங்களில் 40 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படலாம். மேலும், ஆறாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். இத்தகைய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படக்கூடும்
சென்றாண்டு 463,232 கள்ளச் சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

