சிங்கப்பூர் பூப்பந்து வீரர் லோ கியென் யூ சென்ற ஆண்டுக்கான ஆகச் சிறந்த விளையாட்டு வீரராக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 'எஸ்டி அத்லிட் ஆஃப் தி இயர்' எனப்படும் அந்த விருதை 'எஸ்பிஹெச் மீடி'வின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வழங்கியது.
24 வயது லோ, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகப் பூப்பந்து விருதைக் கைப்பற்றி சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார். வெற்றி வாகை சூடியபோதும் இவர் தொடர்ந்து அடக்கமாக இருந்துவருகிறார்.
"சிறப்பாக விளையாடக்கூடிய இதர போட்டியாளர்கள் இருந்தபோதும் நான் விருதை வென்றதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் அனைவருக்கும் பல்வேறு சவால்கள் இருந்திருக்கின்றன, நாம் பல தியாகங்கங்களைச் செய்துள்ளோம். அதனால் இந்த விருதை வெல்ல நாம் அனைவரும் தகுதியானவர்கள்தான்," என்று லோ கூறினார்.
சென்ற ஆண்டு தொடக்கத்தில் சிறப்பாக ஆடச் சிரமப்பட்ட லோவிற்கு கடந்த அக்டோபர் மாதம் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது நெதர்லாந்து பொதுவிருதை வென்றார் லோ.