பிரச்சினைகளைக் கண்டு சிறிய நாடுகள் எதுவும் செய்யாமல் மௌனமாக இருந்துவிடக்கூடாது என்றும் அவை ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில் வெளியுறவு அமைச்சர்
விவியன் பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார்.
உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இதை உணர்த்தியிருப்பதாக அவர் கூறினார்.
பலதரப்பு முறை, அனைத்துலகச் சட்டம் ஆகியவற்றுக்கு சிறிய நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
பெரிய நாடாக இருந்தாலும் சிறிய நாடாக இருந்தாலும் அவற்றின் இறையாண்மை சமமான முறையில் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அப்போதுதான் சிறிய நாடுகள் நிலைத்திருக்க முடியும் என்று டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
"தெளிவான, கொள்கைப் பிடிப்புள்ள நிலைப்பாடு மிகவும் அவசியம்.
"பிற நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பு கொடுக்காமல் அவற்றின் மீது படையெடுப்பது இக்காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
"சிறிய நாடுகள் கொள்கையில் உறுதியாக இருந்து அனைத்துலகச் சட்ட மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது முக்கியம்," என்று அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஐநா தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நேற்று வரை அவர் நியூயார்க்கில் இருந்தார்.
சிறிய நாடுகளுக்கான கருத்
தரங்கில் உயர்நிலை வட்டமாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பேசினார். இந்த அதிகாரபூர்வமற்ற குழுவை 1992ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தொடங்கிவைத்தது.
சிறிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவும் அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்கவும் இந்தக் குழு தொடங்கப்பட்டது.
30 ஆண்டு நிறைவை இந்தக் குழு இவ்வாண்டு அனுசரிக்கிறது.நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கின் நெறியாளராக ஐநாவுக்கான சிங்கப்பூரின் நிரந்தரப் பிரதிநிதி புர்ஹான் கஃபூர் செயல்பட்டார்.
"அனைத்துலகச் சட்டக் கட்டமைப்பு குறைபாடற்றது அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
"இருப்பினும், ஐநா சாசனத்துக்கும் அனைத்துலகச் சட்டத்துக்கும் உட்பட்டு நடப்பது அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு, பொருளியல் மேம்பாடு ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியம். இதுவே உலக மக்களின் விருப்பம்," என்றார் அமைச்சர்.
பல நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள ஐநாவையும் பலதரப்பு முறையையும் வலுப்படுத்துவது அவசியம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
சிங்கப்பூரின் இந்த நிலைப்பாட்டைக் கருத்தரங்கில் ஜமைக்காவின் வெளியுறவு அமைச்சர் கமினா ஜான்சன் ஸ்மித் வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

