குடிபோதையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி போதைப்
பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை அடித்துத் துன்புறுத்திய மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரியான வெங்கடேஷ் ராஜ் நைநார் நாகராஜனுக்கு (படம்) ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் வெங்கடேஷ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவரால் துன்புறுத்தப்பட்ட மலேசியரான சிவபாலன் கன்னியப்பனுக்கு $4,500 இழப்பீடு தருமாறு 35 வயது வெங்கடேஷுக்கு உத்தரவிடப்பட்டது.
துன்புறத்துதல் வழக்கில் வெங்கடேஷ் குற்றவாளி என மாவட்ட நீதிபதி சலினா இஷாக் கடந்த மாதம் தீர்ப்பளித்தார்.
சம்பம் நிகழ்ந்த நாளன்று வெங்கடேஷ் குடிபோதையில் பணியிடத்துக்குச் சென்றதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, அன்று வேலையிடத்திலும் அவர் மது
பானம் அருந்தியதாக தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராவில் அது தெரியாமல் இருக்க பீர் டின்னை அவர் பைக்குள் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடிபோதையில் இருந்தபோது கழிவறையில் அவர் சிவபாலனைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மற்றொரு சம்பவத்தில் காவல்துறை அதிகாரியை வசைபாடியதை வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார்.
இக்குற்றத்துக்காக அவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு 14ஆம் தேதியன்று கேன்பரா ஸ்திரீட்டில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்
தளத்தில் வெங்கடேஷ் தமது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தார்.
இரவு 11.20 மணி அளவில் இதுகுறித்து புகார் செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரி அவர்களை அணுகினார்.
அந்நேரத்தில் பொது இடத்தில் மதுபானம் அருந்த அனுமதி இல்லை என்று அதிகாரி தெரிவித்ததும் வெங்கடேஷ் அவரை வசைபாடினார்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

