வழக்கமான வேலைகளை நிறுத்திவிட்டு பாதுகாப்பு செயல்முறைகளை சீரமைக்க நிறுவனங்களை உத்தரவிடுவது பற்றி மனிதவள அமைச்சு, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்ததுடன் பணியாற்றி வருகிறது.
இந்த மாதம் வேலையிடங்களில் எட்டு ஊழியர்கள் உயிரிழந்ததை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
இவ்வாண்டு இதுவரை 17 ஊழியர்கள் வேலையிட விபத்துகளில் உயிர் இழந்தனர்.
புதன்கிழமை மட்டும் மூன்று பேர் வேலையிட விபத்துகளால் மாண்டனர்.
கனரக வாகனத்தில் சிக்கி மாண்ட இந்திய ஊழியர் திரு சண்முகம் ஜோதி அவர்களில் ஒருவர்.
அதே நாள், பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் தலையில் பெரிய எஃகு கம்பி விழுந்ததால் உயிர் இழந்தார்.
அதை அடுத்து, முந்தைய வாரத்தில் ஏணியிலிருந்து கீழே விழுந்த 64 வயது ஊழியர் காயங்கள் காரணமாக மரணம் அடைந்தார்.
இது கவலை தரும் போக்கு. அடிப்டை அபாயக் கட்டுப்பாடுகள் அல்லது பாதுகாப்பான நடைமுறைகள் இருந்திருந்தால் விபத்துகளில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்திருக்கலாம், என்று மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கண்காணிப்பகத்தின் இயக்குநர் செபேஸ்டியன் டான் கூறினார்.
பாதுகாப்பு நடைமுறைகளை சீரமைக்க நிறுவனங்கள் வேலைகள் நிறுத்தும்படி பணிக்கப்பட்டால், இதுவே இரண்டு ஆண்டுகளில் அத்தகைய நான்காவது நடவடிக்கையாக இருக்கும்.