பிடோக்கில் பனை மரங்கள் வரிசையாக உள்ள ஒரு பகுதியில் வாழும் சுமார் 20 அணில்களை 24 மணி நேரத்துக்கும் நேரலையில் காண்பிப்பது. அத்துடன், அணில்கள் குறித்த தகவல்களையும் அதில் இணைப்பது; என்ன செய்யலாம், செய்யக் கூடாது போன்ற விளக்கங்களுடன் குறிப்புகளை அதில் வழங்கலாம்.
இத்தகைய பரிந்துரைகளைப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்கள் முன்வைத்தனர். தேசிய அளவில் பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீடித்த நிலைத்தன்மையைக் கடைப்பிடித்து செயல்படவும் சிங்கப்பூரில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
'கிரீன் ஆக்ஷன் ஃபோர் கம்யூனிட்டீஸ்' எனப்படும் 'சமூகங்களுக்கான பசுமை நடவடிக்கைகள்' எனும் இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பயிலரங்கு இடம்பெற்றது. சமூகத்தில் உள்ளவர்களை ஒன்றுகூடச் செய்து நீடித்த நிலைத்தன்மை முயற்சிகளைத் திட்டமிட்டு செயல்படுத்த வைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்று 'ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்' தொழில்நுட்பக் கல்விக்கழக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறினார்.
"சமூகத்தில் இருக்கும் கற்பனை வளம், துடிப்பு, திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும்போது சாத்தியமாகக்கூடிய செயல்களுக்கு அளவே இருக்காது. குறிப்பாக நீடித்த நிலைத்தன்மை போன்ற விவகாரங்களுக்கு இது பொருந்தும். இந்த அம்சத்தின் தொடர்பில் பலர் அக்கறை கொண்டிருப்பதுடன் நடவடிக்கையில் இறங்கவும் தயாராய் இருக்கின்றனர்," என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
தென்கிழக்கு வட்டாரத்தின் அடித்தளத் தலைவர்கள் உள்பட 70 சமூகத்தினர் நேற்றைய பயிலரங்கில் கலந்துகொண்டனர். தாங்கள் இருக்கும் பகுதிக்கு உகந்த நீடித்த நிலைத்தன்மை கட்டமைப்பைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.
தேசிய வளர்ச்சி, தொடர்பு, தகவல் ஆகியவற்றுக்கான துணை அமைச்சர் டான் கியெட் ஹாவ், தென்கிழக்கு வட்டார மேயர் ஃபாமி அலிமான் ஆகியோர் பயிலரங்கை வழிநடத்தினர்.

