வழக்கறிஞர்களிடம் நேர்மையின்மை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் மிக உயரிய நடத்தையைப் பின்பற்றுவது முக்கியம் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
வழக்கறிஞர் தேர்வில் ஏமாற்றிய மாணவர்களின் தொடர்பில் வெளியான செய்திகளைப் பற்றிப் பேசிய திரு சண்முகம், தங்களின் சேவைகளை நாடுவோரின் தேவைகளுக்கு ஏற்றவாறு வழக்கறிஞர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கு நேர்மை முக்கியம் என்பதை அவர் சுட்டினார்.
"வழக்கறிஞர்கள் பொதுவாக தங்களின் சேவைகளை நாடுவோரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளவேண்டியவர்கள்.
"நேர்மை, நற்குணம், மிக உயரிய நன்னடத்தை. இவை மிகவும் முக்கியமானவை. நேர்மையின்மை அறவே ஏற்றுக்கொள்ளமுடியாதது." என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.
சாங்கியில் நடைபெற்ற 'தாருமாறு ரன்னர்ஸ்' எனும் ஓட்டப்பந்தயக் குழுவின் நிதி திரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திரு சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
2020ஆம் ஆண்டு வழக்கறிஞர் தேர்வில் வழக்கறிஞர்கள் ஆவதற்குப் பயின்று வந்த 11 பேர் ஏமாற்றியதாக சென்ற மாதத் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் ஆறு பேரை வழக்கறிஞர் சங்கத்தில் சேர்த்துக்கொள்வது ஒத்திவைக்கப்பட்டது. அவர்களின் விண்ணப்பங்களை அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி மறுத்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் பிற்காலத்தில் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதைத் தவிர்க்க அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சூ ஹான் டெக் முடிவுசெய்திருந்தார்.
ஆனால் சென்ற மாதம் 27ஆம் தேதியன்று அவர் தமது முடிவை மாற்றிக்கொண்டார்.
அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரியின் விண்ணப்பத்திற்கேற்ப அவர் அந்த ஆறு பேரின் பெயர்களை வெளியிட்டார். சட்டச் சங்கத்தின் ஆதரவுடன் தலைமைச் சட்ட அதிகாரி விண்ணப்பம் செய்தார்.
இதன் தொடர்பிலான வழக்குகள் இன்னும் நீதிமன்ற விசாரணைக்கு வராததால் தமது கருத்துகளைக் கவனமாக வெளியிடுவதாக அமைச்சர் சண்முகம் சொன்னார். நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

