மின்னிலக்க நாணயங்களில் முதலீடு செய்வதை பிரதமர் லீ சியன் லூங் அங்கீகரித்துள்ளார் என்ற பொய்த் தகவலைக் கொண்ட செய்திக் கட்டுரைகளின் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இத்தகைய கட்டுரைகளில் குறிப்பிடப்படும் முதலீட்டுத் திட்டங்கள் பாதுகாப்பானவை என்றும் அவை அதிகம் லாபம் தரக்கூடியவை என்றும் சொல்லப்படுவதாக காவல்துறை வெளியிட்ட ஆலோசனை அறிக்கை தெரிவித்தது.
"இணையத்தில் வெளியிடப்படும் இத்தகைய கட்டுரைகள் பொதுவாக செய்திக் கட்டுரைகளின் வடிவில் உள்ள கட்டணம் கொண்ட விளம்பரங்கள்," என்று காவல்துறை சொன்னது.
ஒருவர் இந்தக் கட்டுரைகளில் இடம்பெறும் இணைய முகவரிக்குச் செல்லும்போது அவர் மின்னிலக்க நாணய முதலீட்டுத் திட்டங்கள் போன்றவற்றை வழங்கும் இணையத்தளத்திற்குக் கொண்டுசெல்லப்படுவார்.
அந்த இணையத்தளத்தில் தங்களின் தொடர்பு விவரங்களைத் தெரிவிப்போரை, சம்பந்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களைக் கையாள்பவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் தொடர்புகொள்வார்.
போலியான, தவறான கண்ணோட்டத்தைத் தரும் இத்தகைய விளம்பரங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுடன் தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பாக இருக்க மக்கள் பல முயற்சிகளை எடுக்கலாம் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
தங்களுக்கு வழங்கப்படும் முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேள்விகளைக் கேட்பது அவற்றில் ஒன்று.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இணையத்தளத்தில் உள்ள நிதி நிறுவனங்களுக்கான தொகுப்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆராயவும் செய்யலாம்.

