மோசடிகளுக்கு ஆளாகின்ற வெளிநாட்டு ஊழியர்களும் இல்லப் பணிப்பெண்களும் முன்பைவிட இப்போது அதிகம் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
சென்ற ஆண்டில் 3,181 வெளிநாட்டு ஊழியர்கள் மோசடிகளில் சிக்கி ஏமாந்தனர். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 1,965 ஆக இருந்தது. சென்ற ஆண்டில் மோசடிகளுக்கு இலக்கான இல்லப் பணிப்பெண்கள் 357 பேர்.
இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டைவிட அதிகம். 2020ஆம் ஆண்டில் 216 இல்லப் பணிப்பெண்கள் மோசடிகளில் ஏமாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இதனிடையே, பல்வேறு மோசடி களிலும் பின்பற்றப்படும் உத்திகள், தில்லுமுல்லுகள் பற்றி வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நல்வாழ்வு அமைப்புகளும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி நடத்துவோரும் முயற்சிகளை முடுக்கிவிடுகிறார்கள் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
மோசடிகள் அதிகரித்து வருவதால் அத்தகைய தில்லுமுல்லுகளில் சிக்காமல் வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஊழியர்கள் ஏன் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கான காரணங்களை நல்வாழ்வு அமைப்புகள் குறிப்பிட்டன. கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட பணச் சிரமங்களும் ஃபேஸ்புக்கில் இடம்பெறும் போலியான வேலை விளம்பரங்களும் அத்தகைய காரணங்களில் அடங்கும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்தன.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலை தொடர்பான மோசடி ஒன்றில் ஏமாற்றப்பட்டு $11,000 இழந்துவிட்டதாக சிங்கப்பூரில் வேலை பார்க்கும் ஒரு வெளிநாட்டு ஊழியர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அந்த 45 வயது ஊழியர் பங்ளாதேஷில் தன் குடும்பத்திற்காக ஒரு வீட்டைக் கட்ட திட்டமிட்டார். ஆனால் பணம் போய்விட்டதால் வீடு கட்டும் திட்டத்தை காலவரம்பின்றி அவர் ஒத்திவைத்துவிட்டார்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு டிசம்பர்வாக்கில் 246,300 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் பணியாற்றினர். கட்டுமானம், கடல்துறை, செய்முறை தொழில்துறை ஆகியவற்றில் 318,400 வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் பணியாற்றியதாக மனிதவள அமைச்சு தெரிவிக்கிறது.
இதனிடையே, மனிதவள அமைச்சு, லாபநோக்கற்ற அமைப்புகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு ஆகப் புதிய குற்றச்செயல் போக்குகளை ஊழியர்களிடம் எடுத்துச் சொல்லி உதவி வருவதாக காவல்துறை தெரிவித்தது.
வேலை தொடர்பான தில்லுமுல்லுகள், இணைய வர்த்தக மோசடிகள், மின்னஞ்சல் மோசடிகள் ஆகியவையே வெளிநாட்டு ஊழியர்கள் மிக அதிகமாக எதிர்நோக்கிய மோசடிகளில் அடங்கும்.
அதேபோல, மின்னஞ்சல் மோசடிகள், இணையக் காதல் மோசடிகள், கடன் மோசடிகளில் பணிப்பெண்கள் அதிகம் சிக்குகிறார்கள்.
இந்த நிலவரம் கவலை தருவதாக நல்வாழ்வு அமைப்புகள் தெரிவித்தன. மோசடிகளை எதிர்நோக்கும் ஊழியர்கள், தங்கள் முதலாளிகளை அல்லது வேலை நியமன நிறுவனங்களை உதவிக்கு நாட வேண்டும் என்று 'யுனைட்டெட் சேனல்' என்ற நிறுவனத்தின் நிர்வாகி திருவாட்டி ஃபுளோரா ஷா தெரிவித்தார்.