கடந்த நீண்ட வார இறுதியில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே உள்ள தரைவழி எல்லைகளை 950,000க்கும் அதிகமானோர் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாள்களில் 491,400 பேர் தரைவழி எல்லைகளின்வழி சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். 462,400 பேர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.
முன்னதாக புனித வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நீண்ட வார இறுதியில் 436,800 பேர் தரைவழி எல்லைகளைக் கடந்தனர். சென்ற மாதம் 15ஆம் தேதிக்கும் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை பதிவானது.
சென்ற மாதம் முதல் தேதியன்று முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் கட்டுப்பாடுகளின்றி தரைவழிப்ப யணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. புனித வெள்ளிக்கிழமை, அதற்குப் பிறகு வந்த முதல் பொது விடுமுறை நாள்.
கடந்த நீண்ட வார இறுதியில் வாகனங்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும்தான் கூடுதலானோர் தரைவழி எல்லைகளைக் கடந்ததாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
660,400 பயணிகள் தங்களின் வாகனங்களில் எல்லைகலைக் கடந்தனர். 293,400 பேர் மட்டுமே பேருந்துச் சேவைகளில் சென்றனர். எல்லை தாண்டிய பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்துமாறு குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் முன்னதாக பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.