சிங்கப்பூரில் புதுவித கடன் மோசடியால் $20,000க்கும் அதிகமான பணம் பறிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் காவல்துறையில் குறைந்தது 15 புகார்கள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆலோசனைக் குறிப்பு ஒன்றை காவல்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது.
கடன் தருவதாகக் கூறி
மோசடிக்காரர்கள் குறுஞ்செய்தி அனுப்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதை நம்பி சிலர் பதில் அளித்தபோது அவர்களது சிங்பாஸ் விவரங்கள் கேட்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி அவர்களது வேலை தொடர்பான விவரங்
களைப் பற்றி அறிந்துகொண்டு கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்படும் என்று மோசடிக்காரர்கள் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
சிங்பாஸ் அடையாளக் குறியீடு, சிங்பாஸ் மறைச்சொல், குறுஞ்செய்தி மூலம் வரும் ஒருமுறை பயன்படுத்தப்படும் மறைச்சொல் ஆகியவற்றைக் கொண்டு மோசடிக்காரர்கள் வங்கிக்
கணக்குகளைத் தொடங்குவதாகவும் அல்லது புதிய தொலைபேசி எண் பெற பதிவு செய்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிலரிடம் மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட சில வங்கிக்
கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பிவைக்குமாறு தெரிவித்
தனர்.
கடன் வழங்கப்படுவதற்கு முன்பு வசூலிக்கப்படும் நிர்வாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று கூறி பணத்தை
மோசடிக்காரர்கள் அனுப்பி வைக்கச் சொன்னதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
"எதிர்பார்த்த கடன் இறுதி வரை கிடைக்காமல் போக,
மோசடிக்காரர்களிடம் ஏமாந்துவிட்டோம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குப் புரிய வந்தது," என்று காவல்துறையினர் தெரிவித்தனர். உரிமம் பெற்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களுக்கு குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு, சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலம் உத்தேச வாடிக்கையாளர்களை அணுக அனுமதி இல்லை என்று பொதுமக்களுக்கு காவல்துறையினர் நேற்று நினைவூட்டினர். தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.