வரும் நீண்ட வார இறுதி நாள்களில் சிங்கப்பூர்-மலேசியாவுக்கு இடையில் தரைவழி தரைவழியாக பயணிப்பவர்கள் அதிகமான போக்குவரத்தை எதிர்பார்க்கலாம்.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வியாழக்கிழமை (மே 12) அன்று இதைத் தெரிவித்தது.
வரும் திங்கட்கிழமை விசாக தினம்.
அதை முன்னிட்டு ஜொகூர் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு ஆகியவற்றின் வழி அதிகமானோர் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் கூறியது.
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரு நாள்களிலும் தரைவழியாக அதிகமானோர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையிலும் திங்கட்கிழமையிலும் அதிகமானோர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் மூன்று மணியிலிருந்து இரவு 11.59 மணிவரை இரு நாடுகளுக்கும் இடையே தரைவழியாக பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
சனிக்கிழமை காலை ஆறு மணி முதல் 10 மணி வரையிலும் பிற்பகல் நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் ஆணையம் சொன்னது.
அதேபோல் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரையிலும் விசாக தினத்தன்று பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும் தரைவழியாக சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் ஆணையம் கூறியது.
இதற்கு முன்பு வந்த தொழிலாளர் தின, நோன்புப் பெருநாள் நீண்ட வார இறுதியில் 950,000க்கும் அதிகமானோர் சிங்கப்பூர்-மலேசிய தரைவழி எல்லைகளைக் கடந்தனர்.