இரு கார்கள், ஒரு டாக்சி ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தில் காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் இரண்டு வயதுச் சிறுவன்.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தெம்பனிஸ் அவென்யூ 2, தெம்பனிஸ் அவென்யூ 9 சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது.
54 வயது டாக்சி ஓட்டுநர், இரண்டு முதல் 35 வயதுக்குட்பட்ட அவரது நான்கு பயணிகள், மற்றொரு காரில் இருந்த 51க்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று பயணிகளும் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரும்போது சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
காயமடைந்தவர்களில் இருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவ மனைக்கும் மற்ற ஐவர் சாங்கி பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஷின் மின் நாளிதழின் வாசகர்கள் விபத்தின் படங்களை நாளிதழுக்கு அனுப்பி வைத்தனர். அதில் சாலைச் சந்திப்புக்கு அருகே ஒரு டாக்சி புல்தரையில் இருந்ததையும் பலமாக சேதமுற்ற சிவப்பு நிற கார் ஒன்று சாலையில் நடுவில் இருப்பதையும் காண முடிந்தது.
வெள்ளி நிற கார் ஒன்றும் சிறிய சேதத்துடன் அருகில் காணப்பட்டது.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

