அனைத்து சிங்கப்பூர் குடும்பங்கள் இப்போது $100 மதிப்புள்ள சிடிசி எனும் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டை இம்மாதம் முதல் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தப் பற்றுச்சீட்டுகளை பிரதான குடியிருப்புப் பகுதிகளில் உள்ள 16,000க்கும் மேற்பட்ட கடைகளிலும் அங்காடிக் கடைகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடந்த ஆண்டு டிசம்பரில் முதலாம் கட்ட சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, ஐந்து மாதங்களுக்கு முன் இரண்டாம் கட்ட பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
"இந்த ஆண்டு பற்றுச்சீட்டுத் திட்டம் பிற்பகுதியில்தான் தொடங்க இருந்தது. ஆனால் விலைவாசி உயர்வதைக் கருத்தில்கொண்டு முன்னதாகவே பற்றுச்சீட்டுகள் இப்போது விநியோகிக்கப்படுகின்றன," என்றார் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்.
இந்தப் பற்றுச்சீட்டுகள் பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டியவை. அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களும் இந்தப் பற்றுச்சீட்டுகளுக்கு தானாக தகுதி பெறும்.
குடும்பங்கள் திறன்பேசி மூலமாக சிடிசி பற்றுச்சீட்டு தொடர்பான இணையத் தளத்திலிருந்து பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இணையத் தளத்தில் CDC Vouchers 2022 எனும் வாசகத்தின் மீது தட்டி, ஆகக் கடைசி பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் CDC Vouchers 2021 எனும் வாசகத்தின் மீது தட்டி ஆகக் கடைசி பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்
நீங்கள் உங்கள் சிங்பாஸ் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இணையத் தளத்தில் நுழைந்தவுடன் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான இணைப்பு உங்கள் குறுந்தகவல் வழி அனுப்பப்படும். இந்த இணைப்பை நீங்கள் உங்கள் குடும்பத்தாரும் பகிர்ந்துகொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர் ஒருவர்தான் சிங்பாஸ் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
டிசம்பர் 31ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்
கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுக்கான பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 31ஆம் தேதி வரை பயன்படுத்த முடியும்.
இப்பற்றுசீட்டுகளை உணவகங்களில் மட்டுமல்லாது, உடல்நலக் காரணங்களுக்காகவும் பயன்படுத்தலாம். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு மருந்தகங்களில் இப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தும் வசதி உள்ளது.
உதாரணத்திற்கு, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 93ல் உள்ள, ஜூரோங் பகல், இரவு மருந்தகத்தில் சிடிசி பற்றுசீட்டுகளைப் பயன்படுத்தலாம். சாதாரண உடல்நல குறைபாடுகளுக்கு மட்டுமல்லாமல், கண்கள், பற்கள் போன்ற உடலுறுப்புகளுக்கென சேவையாற்றும் மருந்தகங்களிலும் இப்பற்றுசீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
மேலும், சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் விளையாட்டுப் பொருள்கள் வாங்க வேண்டுமென்றாலும் இப்பற்றுசீட்டுகளைப் பயன்படுத்தலாம். அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள "வார் கேம்ஸ்" என்ற கடையில் சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
உங்கள் வட்டாரத்தில் இது போன்ற எத்தகைய வணிகங்களில் இப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என அறிய, https://www.gowhere.gov.sg/cdcvouchers merchants என்ற இணையத் தளத்தை நாடலாம்.
உணவு, பானங்களுக்கே அதிக பற்றுச்சீட்டு பயன்பாடு
கடந்த ஆண்டு டிசம்பரில் முதலாம் கட்ட சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டு, ஐந்து மாதங்களுக்குள் 1.1 மில்லியன் குடும்பங்கள் அல்லது அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களில் 93% குடும்பங்கள் தங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட பற்றுச்சீட்டுகளில் 70% பயன்படுத்தப்பட்டு விட்டன. அதன் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $85 மில்லியன்.
இவற்றில் 46% பற்றுச்சீட்டுகள் உணவங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகள், சிற்றுண்டியகங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் உணவு, பானங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டன.
42% பற்றுச்சீட்டுகள் வீவக கடைகள், ஈர, உலர் சந்தைகளிலும் எஞ்சியுள்ள 12% சிறிய பகுதிவாரிக் கடைகளிலும் பயன்படுத்தப்பட்டன என்று தென்மேற்கு வட்டார மேயரும், மேயர்கள் குழுவின் தலைவருமான லோ யென் லிங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.