சிறுநீர், தொழில்துறைக் கழிவுகள் ஆகியவற்றில் இருந்து புதுப்பிக்கக்கூடிய சிமென்ட்டைத் தயாரிக்கும் முறையை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடற்கரைகளில் மணல் அரிப்பைக் குறைக்கும் கட்டுமானங்கள், பாலைவனங்களில் குடிநீர்த் தேக்கம் அமைப்பது போன்றவற்றில் இதைப் பயன்படுத்தலாம்.
விரிசல்களைச் சரிசெய்யவும் பாறைச் சிற்பங்கள், சிலைகள் போன்றவற்றைச் சீராக்கவும் இது கைகொடுக்கும்.
'பயோசிமென்ட்' எனப்படும் இந்தப் புதிய பொருள், முழுக்க முழுக்க கழிவுப் பொருள்களில் இருந்தே தயாரிக்கப்படுகிறது.
பாரம்பரியமான சிமென்ட் உற்பத்தி முறையில் 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தேவைப்படும். ஆனால் சாதாரணமான அறை வெப்பநிலையே இதற்குப் போதும்.
பாரம்பரிய முறையைப் போன்று இதில் அதிகமான கரியமில வாயு வெளியேற்றம் கிடையாது. அதனால் இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
கழிவுகளை இதில் மூலப் பொருள்களாகப் பயன்படுத்துவதால், அவற்றை முறைப்படி அப்புறப்படுத்துவதற்கான செலவுகளும் குறையும்.
சிறுநீர், தொழில்துறைக் கழிவுகள் ஆகியவற்றை அமிலம், நுண்ணுயிரிகள் ஆகியவற்றுடன் கலக்கும்போது கிடைக்கும் இந்த சிமென்ட் வழக்கமான சிமென்ட்டைக் காட்டிலும் உறுதியானது என்கின்றனர் பல்கலையின் ஆய்வாளர்கள்.
புதுப்பிப்பு முறையில் தயாரிக்கப்படும் இந்த சிமென்ட், நீடித்த நிலைத்தன்மை மிக்க பொருளும்கூட.
தேசியப் பூங்காக் கழகம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்காக் கடற்கரையில் மணல் அரிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்தப் புதிய சிமென்ட்டை இவர்கள் சோதித்துவருகின்றனர்.
எதிர்காலத்தில் சாலைச் சீரமைப்பு, சுரங்கப் பாதை பழுதுபார்ப்பு போன்ற பெருந்திட்டங்களிலும் இதனைச் சோதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
'பயோசிமென்ட்'டில் பெருமளவில் காணப்படும் கால்சியம் கார்பனேட் பவளப்பாறை வளர்வதற்கு ஏற்ற பொருள் என்பதால் வருங்காலத்தில் பவளப்பாறை வளர்ப்புத் திட்டங்களிலும் இதனைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.