சிங்கப்பூரும் வட ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவும் அவற்றுக்கு இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் கண்டுள்ளன.
எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (படம்) நேற்று முன்தினம் எஸ்டோனியத் தலைநகர் டாலின் சென்றடைந்தார்.
அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் கல்லே லானெட்டுடன் இணைந்து இருதரப்புத் தற்காப்பு உறவுகளை மேம்படுத்தும் புரிந்துணர்வுக் குறிப்பில் அவர் நேற்று கையெழுத்திட்டார்.
தற்காப்புக் கொள்கை, தற்காப்புத் துறையினருக்கான பயிற்சி, தேசியச் சேவை, இணையப் பாதுகாப்பு, முழுமைத் தற்காப்பு உள்ளிட்ட துறைகளில் வலுவான தற்காப்பு ஒத்துழைப்புக்கு இந்த உடன்படிக்கை வழிவகுக்கும்.
இரு அமைச்சர்களும் உலகளாவிய, வட்டாரப் பாதுகாப்பு மேம்பாடு குறித்தும் கலந்துரையாடியதாகக் கூறப்பட்டது.
எஸ்டோனிய இணையப் பாதுகாப்பு வல்லுநர்களையும் 'நேட்டோ' இணையத் தற்காப்பு நிலைய நிபுணர்களையும் அவர் சந்தித்தார்.
டாக்டர் இங் இன்று எஸ்டோனியப் பிரதமர் கஜா கல்லாசைச் சந்திப்பார். நாளை அவர் 15ஆவது லென்னார்ட் மெரி கருத்தரங்கில் உரையாற்றுவார். பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை தொடர்பான வருடாந்தரக் கருத்தரங்கு இது.
பின்னர் லாட்வியத் தலைநகர் ரிகாவிற்குச் சென்று அந்நாட்டுத் தலைவர்கள், அதிகாரிகளைச் சந்திக்கும் அமைச்சர் இங், தற்காப்பு ஆய்வு நிலையங்களைப் பார்வையிடுவார். டாக்டர் இங்கின் பயணம் வரும் செவ்வாய்க்கிழமைவரை நீடிக்கும்.