ஈசூன் கட்டுமானத் தலத்தில் கலைப் படைப்புகள்
ஈசூன் வட்டாரத்தின் வளமான வரலாறு, மரபுடைமை ஆகியவற்றை எடுத்துக்கூறும் கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தளம் ஒன்றைச் சுற்றி இவை அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு.
ஈசூன் ரிங் ரோட்டில் முன்னாள் சொங் பாங் சமூக மன்றம் இருந்த இடம், ஈசூன் அவென்யூ 5ல் உள்ள புளோக் 102 ஆகியவை சிங்கப்பூர் நில ஆணையத்தின் புதிய ஒருங்கிணைந்த கட்டடத்துக்காக இடிக்கப்படுகின்றன.
அதற்காக இந்த இடத்தைச் சுற்றிலும் 2.4 மீட்டர் உயரத்திற்கு 400 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புப் பலகைகளில் கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளூர்க் கலைஞர்கள் சன்னி இங், டேரன் சோ ஆகியோரின் படைப்புகளுடன் ஈசூன் வட்டாரப் பள்ளி மாணவர்களின் படைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
1800ஆம் ஆண்டில் இருந்து 'நீ சூன்' எனப்படும் ஈசூன் வட்டாரத்தில் அமைந்திருந்த தோட்டங்கள், மீன் பண்ணைகள், கம்பத்து வாழ்க்கைமுறை ஆகியவற்றைச் சித்திரிக்கும் படைப்புகள் இவை.
சிங்கப்பூரர்களிடம் கையூட்டு கேட்ட ஜோகூர் அதிகாரி
ஜோகூருக்கு அன்னையர் தினத்தைக் கொண்டாடச் சென்ற சிங்கப்பூர்க் குடும்பத்தினரிடம் ஜோகூர் பாரு சோதனைச் சாவடி அதிகாரி ஒருவர் கையூட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஷின் மின் நாளேடு சென்ற செவ்வாய்க்கிழமை இதுபற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாகக் கருதுவதாகவும் இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாகவும் ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 7ஆம் தேதி ஜோகூர் பாரு சோதனைச் சாவடியில் குடிநுழைவு அதிகாரி ஒருவர் சாலைப் பாதுகாப்புக் கூம்பை அகற்றிவிட்டு முகப்பு ஒன்றை நோக்கிச் செல்லும்படி கூறியதாக 42 வயது சிங்கப்பூரர் திருவாட்டி சோங் கூறினார். ஆனால் அங்கே யாரும் இல்லை என்றும் வெகுநாள் கழித்து வந்திருப்பதால் நடைமுறைகள் மாறியிருக்கலாம் என்று நினைத்து வாகனத்தை மேலும் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் சந்தித்த அதிகாரி ஒருவர், குடிநுழைவு நடைமுறைகளைப் பின்பற்றாத குற்றத்திற்கு தடுத்துவைக்கப்படலாம் அல்லது பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் செலுத்தவேண்டும் என்று கூறியதாகவும் தனிப்பட்ட முறையில் இதற்குத் தீர்வுகாண 400 ரிங்கிட் லஞ்சம் தரும்படி கேட்டதாகவும் திருவாட்டி சோங் குறிப்பிட்டார். தன்னிடம் பணம் இல்லாததால் 200 ரிங்கிட்டிற்கு அந்த அதிகாரி ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மலாய்,முஸ்லிம் சமூகத்தினருக்கு அமைச்சர் மசகோஸ் பாராட்டு
சிங்கப்பூரின் மலாய், முஸ்லிம் சமூகத்தினர் கொவிட்-19 நெருக்கடியைச் சிறப்பான முறையில் கையாண்டதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி பாராட்டியுள்ளார்.
கிருமிப் பரவலால் ஏற்பட்ட சவால்களை அவர்கள் நல்லமுறையில் சமாளித்ததாக அமைச்சர் கூறினார்.
மலாய், முஸ்லிம் சமூகத்தினரின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் நலத்திட்டங்களை அவர் நேற்று அறிவித்தார். கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அவை.
கொவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தமது உரையில் அமைச்சர் வலியுறுத்தினார். முறையான அறிவு, அக்கறை, ஒழுக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்ததால்தான் சிங்கப்பூரில் கிருமிப்பரவல் நிலைமை இந்த அளவு மேம்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ரமலான் நோன்பு மாதம் முஸ்லிம் மக்களுக்குள் இத்தகைய பண்புகளை விதைப்பதாக திரு மசகோஸ் கூறினார்.
வருடாந்தர நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 400 சமூக, சமயத் தலைவர்களிடம் அவர் உரையாற்றினார்.
நிகழ்ச்சி பான் பசிஃபிக் சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்றது.