முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், இந்த ஆண்டு ஹஜ்ஜுப் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்த 407 சிங்கப்பூரர்களுக்கும் விசா பெற்றுத்தருவதற்கான ஏற்பாடுகளில் முனைந்துள்ளது.
407 பேரும் மன்றத்தால் நியமிக்கப்பட்ட பயண முகவர்களிடம் பதிந்துகொண்டவர்கள் என்று கூறப்பட்டது. சவூதி அரேபிய அரசாங்கத்திடம் இருந்து இவர்களுக்கு விசா பெறுவதன் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருவதாக அது குறிப்பிட்டது.
கொவிட்-19 கிருமிப்பரவலால் 2020, 2021ஆம் ஆண்டுகளில் முயிஸ் ஹஜ்ஜுப் பயண ஏற்பாடுகளை நிறுத்திவைத்திருந்தது.
முன்னதாக, இந்த ஆண்டு மொத்தம் ஒரு மில்லியன் யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று ஹஜ்ஜு, உம்ரா ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் சவுதி அரேபிய அமைச்சு அறிவித்தது.
கொவிட்-19க்கு முன்னர் ஒவ்வொரு நாட்டுக்கும் அனுமதிக்கப்பட்ட யாத்திரிகர்கள் எண்ணிக்கையில் 45 விழுக்காட்டினருக்கு மட்டும் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
அதன்கீழ், வழக்கமாக 900 சிங்கப்பூரர்கள் அனுமதிக்கப்படுவர் என்றாலும் இந்த ஆண்டு 407 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.
புனிதப் பயணம் மேற்கொள்வோர் 65க்குக் கீழான வயதுடன் சவூதி அரேபிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்திக்கொண்டிருப்பது கட்டாயம். சவூதி அரேபியா கிளம்புவதற்கு 72 மணி நேரத்திற்குள் கிருமித்தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்தாலும் 2020ஆம் ஆண்டு ஹஜ்ஜுப் பயணத்துக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை முயிஸ் சென்ற மாதம் தெளிவுபடுத்தியது.

