சமையலறைச் சாதன உற்பத்தியாளரான 'ரொட்டிமெட்டிக்' நிறுவனம் 'நிஞ்சா வேன்' தளவாட நிறுவனம் உட்பட பல சிறிய நிறுவனங்கள், பெரிய வர்த்தக வருவாயை ஈட்ட மின்னிலக்க அலையைப் பயன்படுத்தி, புதிய சந்தைகளுக்குச் சென்றுள்ளன என்று நேற்று நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கில் பஙகேற்ற நிபுணர்கள் கருத்துரைத்தனர்.
"புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் முதல் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், சிங்கப்பூர் பொருளியலின் முதுகெலும்பாக விளங்குகின்றன," என்று கூகல் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் எஸ்டெக் அமைப்பின் ஆலோசகருமான திரு பென் கிங் தெரிவித்தார்.
"கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், சிங்கப்பூர் உட்பட இந்த வட்டாரத்தில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சமூகம், வர்த்த கத் தொடர்நிலையைக் கட்டிக்காக்க மின்னிலக்கத்தின் உதவியை நாடியது," என்றார் திரு கிங்.
தென்கிழக்காசிய சந்தையில் இன்னும் அதிக போட்டித்தன்மையுடன் விளங்க, சிறிய நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு தொழில்நுட்பம், மின்னிலக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றிய கருத்தரங்கில் திரு கிங் பேசினார்.
'எஸ்ஜி டெக்' அமைப்பும் கூகல் நிறுவனமும் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன.
கூகல், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், தோட் வொர்க்ஸ் எனும் மென்பொருள் நிறுவனம், பெய்ன் அண்ட் கம்பெனி எனும் நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஆகியவற்றின் பேச்சாளர்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் 170 பிரதிநிதிகள் முன்னிலையில் பேசினர். அவர்களில் 64 பேர் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கருத்தரங்கின் பேச்சாளர்களில் ஒருவரான வர்த்தக தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், இந்தக் கிருமித்தொற்றுக்குப் பிந்திய சூழ்நிலையில் சிறிய நடுத்தர நிறுவனங்கள் பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் பற்றி விளக்கினார்.
சிங்கப்பூரில் உள்ள அனைத்து நிறுவனங்களில் 99% சிறிய, நடுத்தர நிறுவனங்கள் என்பதைச் சுட்டிய அமைச்சர், அவை மின்னிலக்கமயமாவதற்கு அரசாங்கமும் பெரிய நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றார்.
பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, எல்லைகள் திறக்கப்பட்டாலும் மின்னி லக்கமயமாதலுக்கான முக்கியத்துவம் வலுவாகவே இருக்கும் திரு டான் நம்பிக்கை தெரிவித்தார்.
"கொவிட்-19 நமது சிந்தனையை ஒருமுகப்படுத்த இருவழிகளில் உதவியுள்ளது. ஒன்று, மின்னிலக்கமயமாதலையும் நீடித்த நிலைத்தன்மையையும் மையமாகக் கொண்ட நமது பொருளியலை வேகப்படுத்துதல். இரண்டு, மின்னிலக்கம் மற்றும் பசுமை முயற்சிகளை மேற்கொள்ளுதல்," என்றும் அமைச்சர் விவரித்தார்.

