கெரோசல் மின்வர்த்தகத் தளத்தில் வாடிக்கையாளர்களைப் போல் நடித்தவர்களால் ஏமாற்றப்பட்ட குறைந்தது 15 பேர் மொத்தம் 12,000 வெள்ளிக்கு மேல் பறிகொடுத்துள்ளனர்.
கெரோசல் தளத்தின் கெரோபே மின்கட்டண முறையைக் கொண்டு பொருள்களை விற்பவர்களின் பேநவ் கணக்கிற்குக் கட்டணத்தைச் செலுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுக்காரர்கள் அந்த மோசடிச் செயல்களை இம்மாதம் மேற்கொண்டனர்.
ஏமாற்றப்பட்டவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று மோசடி நிகழ்த்தப்பட்டது.
தற்போது கெரோசல் புரொட்டெக்ஷன் என்றழைக்கப்படும் கெரோபே, மின்னஞ்சல் வாயிலாகவோ மற்ற இணையத்தளங்களின் மூலம் வங்கிக் கணக்கு தொடர்பிலான தனிப்பட்ட விவரங்களைப் பதிவுசெய்ய வைத்தோ விற்கப்படும் பொருள்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும்படி விற்பவர்களிடம் கேட்டுக்கொள்ளமாட்டா என்று காவல்துறை குறிப்பிட்டது.

