அமைச்சர்: பராமரிப்பவர்கள் நலமாக இருந்தால்தான் மற்றவர்களைக் கவனிக்க முடியும்
நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் அத்தகைய நோயாளிகளுக்குச் சேவையாற்றும் பராமரிப்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
நீரிழிவு நோய்க்கு எதிரான தேசிய போராட்டத்தில் நோயாளிகளைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளும் சமூகமும் இங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நீரிழிவு நோயாளிகளைப் பராமரிக்க வேண்டியது முக்கியமானது. அவர்களைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அதைவிட முக்கியமானது என்று திரு சான் வலியுறுத்தினார்.
பராமரிப்பு ஊழியர்கள் இல்லை என்றால் நோயாளிகளைக் கவனிக்க இயலாது என்றாரவர்.
பராமரிப்பாளருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டாகிவிடும் என்று அவர் தெரிவித்தார்.
நீரிழிவு தவிர்ப்பு, பராமரிப்பு பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு சான், செந்தோசாவில் நேற்று 'டயாபிடிஸ் சிங்கப்பூர்' என்ற அறப்பணி அமைப்பு முதன்முதலாக ஏற்பாடு செய்த சைக்கிளோட்ட நிகழ்ச்சியில் பேசினார். அந்த நிகழ்ச்சியில் உடற்குறையாளர்கள் உட்பட ஏறத்தாழ 300 சைக்கிளோட்டிகள் கலந்துகொண்டனர்.
அவர்கள் 4 கி.மீ. அல்லது 20 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்தனர்.
சிங்கப்பூர் 2016ல் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தை அறிவித்தது. 2025வது ஆண்டு வாக்கில் சிங்கப்பூர் வாசிகளில் நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கும். ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கும் என்று 2017ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இளம் வயதிலேயே முறையான உடற்பயிற்சி, உடல்நலத்துக்கு ஏற்ற உணவு ஆகியவற்றுடன் சரியான அணுகுமுறையை, வாழ்க்கை பாணியைக் கைக்கொள்ள வேண்டியது முக்கியமானது என்று திரு சான் வலியுறுத்தினார்.
ஒருவரின் வயது எப்படி இருந்தாலும் அவர் நலமான வாழ்க்கை பாணியைக் கைக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

