சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 8,000க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு முழுவதும் பதிவான 5,258ஐவிட கணிசமான அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் பொதுவாக ஜூன், அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் டெங்கி தொற்று அதிகமாக இருக்கும்.
ஆனால் அந்தக் காலம் வருவதற்கு முன்னரே தொற்று எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருப்பது கவலை தரும் ஒன்று என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் கூறியுள்ளார்.
உட்ஸ்வேல் கூட்டுரிமை வீட்டு வளாகத்திற்குச் சென்றபோது அவர் இவ்வாறு கூறினார். உட்லண்ட்ஸ் டிரைவ் 72ல் இருக்கும் இப்பகுதி, டெங்கி தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று.
கடந்த மார்ச் மாதம் இங்கு முதல்முதலாக ஒருவருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டது. இப்போது 96 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
"வாரந்தோறும் தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள அவசரகால நடவடிக்கை எடுக்கவேண்டிய காலகட்டம் இது," என்று உள்துறை துணை அமைச்சருமான திரு டான் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி சென்ற வாரம் 1,055 பேர் டெங்கிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
மேலும், இதுவரை 280 டெங்கி தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்ற மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 196ஆக இருந்தது.
கடந்த ஜனவரி மாதம் முதல் சென்ற மாதம்வரை தேசிய சுற்றுப்புற வாரியம் தீவு முழுவதும் 243,000 சோதனைகளை நடத்தியது. கட்டுமானத் தளங்களில் நடத்தப்பட்ட சுமார் 1,900 சோதனைகளும் அவற்றில் அடங்கும்.
கிட்டத்தட்ட 7,100 கொசுக்கள் இனப்பெருக்க இடங்கள் அடையாளம் காணப்பட்டன. ஏடீஸ் கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இடங்களில் 60 விழுக்காட்டு இடங்கள் வீடுகளில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

