காவல்துறை, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவையுடன் சேர்ந்து பொதுமக்களை எச்சரித்துள்ளது.
கணினியின் இயங்குதளத்தைப் (OS) புதுப்பித்துக்கொள்ளும்படி கேட்டு போலியான ஓர் இணைப்பு இணையத்தில் புழக்கத்தில் விடப்படுகிறது. மின்னஞ்சல் வழியாகவும் அது அனுப்பப்படும். அதைப் பதிவிறக்கம் செய்தால் அதனுடன் சேர்ந்து 'மேக்னிபர்' என்ற மிரட்டல் மென்பொருள் ஒன்றும் உங்கள் கணினிக்குள் புகுந்துவிடும்.
அது கணினியில் இருக்கும் உங்கள் தகவல்களை முடக்கிவிடும். வங்கிக் கணக்குகள், சமூக ஊடக கணக்குகள், படங்கள், காணொளிகள் போன்றவை எல்லாம் மோசடிப்பேர்வழிகள் வசம் போய்விடும். அவற்றைப் பயன்படுத்தி அந்தப் பேர்வழிகள் பணத்தை திருடிவிடுவார்கள்.
அல்லது உங்கள் தகவல்களைப் பயன்படுத்தி அவர்கள் மோசடி வேலைகளில் ஈடுபடுவார்கள்.
கணினி பழையபடி செயல்பட வேண்டுமானால் பணத்தை இணைய நாணய வடிவில் அனுப்பும்படி அவர்கள் மிரட்டுவார்கள்.
ஆகையால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்தும்படி அவை ஆலோசனை கூறின.

