சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதையே இலக்காகக் கொண்டுள்ளார் சுவாதி நாயர்.
நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியில் மக்கள் தொடர்புத்துறையில் பட்டயம் பெற்றுள்ள இவர், கல்விக்கு அப்பாலும் பள்ளி, சமூக நிகழ்ச்சிகளில் மும்முரமாக ஈடுபட்டார். பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு முன்பு தேசிய தொடக்கக்கல்லூரியில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் சுவாதி பயின்றார்.
வழக்கறிஞராக வேண்டும் என்ற சிறுவயது கனவோடு இருந்த இருந்த இவர், ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். தொடக்கக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டைத் தொடங்கியபோது கலவையான பாடங்களைத் தேர்ந்தெடுக்க விரும்பிய சுவாதிக்கு அவ்வாறு செய்ய வாய்ப்பு அமையவில்லை.
தொடக்கக்கல்லூரியில் படித்தபோது பெரும்பாலான பாடங்களில் இவருக்கு நாட்டம் இல்லாததால் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியாமல் சிரமப்பட்டார்.
இதனால் தொடக்கக்கல்லூரிக் கல்வியை நிறுத்த இவர் முடிவு எடுத்தார். இவருடைய பெற்றோர் இம்முடிவை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தமக்கு மக்கள் தொடர்புத்துறையில் சேர ஆர்வம் இருப்பதாக அவர்களிடம் எடுத்துச்சொன்னபோது சுவாதியின் விருப்பத்திற்கு அவர்கள் ஆதரவளித்தனர்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்த சுவாதி, கல்வியில் மட்டுமல்லாமல், சமூகச் சேவையிலும் இணைப்பாட நடவடிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
இந்தியாவில் பெண்களை ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம் பற்றி செய்திகளில் படித்த சுவாதி வேதனை அடைந்தார். இதுபோன்ற அநீதிகளைத் தடுக்க வேண்டும் என்ற வெறி இவருள் எழுந்தது.
மலாவியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லம் ஒன்றில் வசிக்கும் சிறுவர்களுக்கு உதவ நன்கொடை இயக்கத்தை நடத்தி அதில் கிடைத்த பணத்தை அவர்களிடம் சுவாதி வழங்கினார்.
அந்த இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களோடும் அங்கு பணிபுரிபவர்களோடும் இவர் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டார். அவ்வப்போது அவர்கள் சுவாதிக்கு தொலைபேசியில் தொடர்புகொள்வது இவருடைய மனதை நெகிழ வைத்துள்ளது.
சமூக சேவையில் இறங்கியதோடு பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளார் சுவாதி. 'ஸ்டேஜ்52' என்னும் இணைப்பாட நடவடிக்கையின் தலைவராக இருந்த இவர், நாடக நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் இவர் நடத்திய நிகழ்ச்சி களுள், 'ஹெலொவின்' கொண் டாட்ட நிகழ்ச்சி தமக்குப் புது மையான அனுபவத்தை தந்துள் ளதை நினைவுகூர்ந்தார்.
"கல்விப் பயணத்தில் நான் பல திருப்பங்களை எதிர்நோக்கினேன். அவற்றைத் தோல்விகளாக எண்ணாமல் நான் வெல்ல வேண்டிய சவால்களாக நினைத்துக்கொண்டதால் தான் இன்று சிறப்பு தேர்ச்சியடைந்த
மாணவர்களுள் ஒருவராகியுள்ளேன்," என்றார் சுவாதி.
மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமென ஆவலுடன் இருக்கும் சுவாதி, பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கைப் படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார்.

