நீ சூன் வட்டார மக்களுடன் கைகோத்து, நீ சூன் சவுத் இந்தியர் நற்பணிச் செயல்குழு சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இரண்டு சாதனைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்று, ஆக அதிகமான, ஏறக்குறைய 10,000 சாப்ஸ்டிக் குச்சிகளைக் கொண்டு ரங்கோலிக் கோலத்தில் புலியை வடிவமைத்தது.
மற்றது, ஒரே நேரத்தில் ஆக அதிகமான 110 பேர் ரங்கோலி வடிவிலான ஓவியங்களை பஞ்சைக் கொண்டு உருவாக்கியது.
இரு சாதனைகளும் கடந்த சனிக்கிழமை படைக்கப்பட்டன.
சீனர்களின் சந்திரமுறைப்படி இந்த ஆண்டு புலி என்பதால், சாப்ஸ்டிக் குச்சிகளால் ஆன ரங்கோலி புலியை வடிவமைத்தனர் பங்கேற்பாளர்கள்.
சிங்கப்பூரின் தனித்துவமான கலாசார பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இன மக்களும் இணைந்து சாதனைகள் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நீ சூன் சவுத் இந்தியர் நற்பணிச் செயல்குழுத் தலைவர் சித்திரா துரைசாமி தெரிவித்தார்.
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து இவ்வாண்டு 57 ஆண்டுகள் ஆகப்போவதை குறிக்க 57 ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த ஓவியங்களை பஞ்சைக் கொண்டு 110 பேர் உருவாக்கினர்.
"அனைத்து இன மக்களுடன் இணைந்து இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். அனைவரும் ஒன்றிணைந்து கலைச் செயல்களில் ஈடுபடுவதை பெருமையாகக் கொள்ள வேண்டும்," என்று கூறினார் நீ சூன் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகரான குமாரி கேரி டான்.
"இத்தகைய செயல்கள் நமக்குள் கருத்து வேறுபாடுகளை அகற்றி ஒற்றுமையை வளர்க்கும். சக குடியிருப்பாளர்களுடன் பந்தத்தை வளர்க்க முயற்சிப்பதே எங்களது அடித்தள அமைப்பு நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும்," என்றார் அவர்.
இந்திய இனக் குழுக்களில் புத்தாண்டுகளைக் கொண்டாடும் வகையில் சித்திரைக் கலைவிழா சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது.
ஈராண்டுகளுக்குப் பின்னர் நேரடியாக ஆடல், பாடல், அதிர்ஷ்டக் குலுக்குடன் நடைபெற்ற கலைவிழாவில் கிட்டத்தட்ட 500 பேர் பங்கேற்று மகிழ்ந்தனர்.

