தடுப்பூசி போட்டுக்கொள்ள பலதுறை மருந்தகங்களுக்குச் செல்லும் சிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது ஏற்படும் வலி மற்றும் பயத்தில் இருந்து அவர்களது கவனத்தைத் திசைதிருப்ப மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் கூடிய கேட்பொறி (headset) வழங்கப்படும்.
'சில்வர்' என அழைக்கப்படும் இந்த மென்பொருள், இரு நிமிடங்களுக்குக் கதை ஒன்றைச் சொல்லும்.
வலியை ஏற்படுத்தும் மருத்துவச் சிகிச்சை முறையில் சிறார்களின் கவனத்தைத் திசைதிருப்ப தற்போது விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்படுவதுடன் காணொளிக் காட்சிகளும் காட்டப்படுகின்றன. இனி அவற்றுக்கு ஒரு மாற்றாக இந்த மென்பொருள் பயன்படுத்தப்படும்.
சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும்போது அவர்களுக்கு ஏற்படும் பயத்தைத் தணிக்க, மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து சிங்ஹெல்த் பலதுறை மருந்தகம் நடத்திய ஆய்வில் 'சில்வர்' மென்பொருள் தயாரிக்கப்பட்டது.
தேசிய கல்விக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடனும் அனுபவம் உடைய தாதிகளுடனும் சேர்ந்து சிங்ஹெல்த் குழு இந்தக் கதையை உருவாக்கியது.
"ஐபேட் சாதனத்தில் யூடியூப் காணொளியைப் பார்க்கும்போதும், தங்களுக்குப் பக்கத்தில் தாதிகளும் ஊசிகளும் இருப்பதைச் சிறார்கள் கவனிப்பர். மாறாக, மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது சிறார்களின் கவனம் திசைதிருப்பப்படுகிறது.
"இதனால், தடுப்பூசி போடப்படும்போது அவர்களுக்கு வலியை உணரும் தன்மையும் குறைகிறது," என்று சிங்ஹெல்த் பலதுறை மருந்தகம்-செங்காங் மருந்தக இயக்குநர் டாக்டர் சாங் ஸி யிங் கூறினார்.
எனவேதான், சிறார்களுக்குத் தடுப்பூசி போடும்போது மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.
இளம் வயதினருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் இந்த ஆய்வை விரிவுபடுத்த சிங்ஹெல்த் குழு திட்டமிடுகிறது. ஊசி போட்டுக்கொள்ள பயம் உடையோரும் இந்த ஆய்வில் உட்படுத்தப்படுவர்.
"மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பொறுத்தமட்டில், சிறார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்போது அவர்கள் புதுப்புது அனுபவங்களைப் பெறும் நோக்கில், பலதரப்பட்ட மென்பொருளைத் தயாரிக்க நாங்கள் பரிசீலித்து வருகிறோம்," என்றார் சிங்ஹெல்த் பலதுறை மருந்தக ஆய்வுப் பிரிவு இயக்குநர் இணைப் பேராசிரியர் டான் நியாப் சுவான்.

