தென்கிழக்காசியாவின் ஏழு நாடுகளைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர்கள் அணுக்கமாகச் செயல்பட்டு உடனடியாக விமானப் போக்குவரத்தைப் பழைய நிலைக்கு மீட்டெடுக்க உறுதி தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், கம்போடியா, புருணை ஆகியவற்றின் போக்குவரத்து அமைச்சர்கள் இதன் தொடர்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆசியான் வட்டாரத்தில் ஒரே விமானப் போக்குவரத்துச் சந்தையை அமைப்பதற்கும் அந்தந்த நாட்டில் வழங்கப்படும் கொவிட்-19 சுகாதாரச் சான்றிதழை மற்ற நாடுகள் அங்கீகரிப்பதற்கும் இவர்கள் இணக்கம் கண்டனர்.
தென்கிழக்காசியாவிற்குள்ளும் மற்ற வட்டாரங்களுடனும் விமானப் போக்குவரத்துத் தொடர்பை வலுப்படுத்த சேர்ந்து பணியாற்ற அமைச்சர்கள் உறுதிபூண்டனர்.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி, மீட்சி, துறைசார்ந்த ஊழியர்களின் நலன் ஆகியவற்றுக்கு ஆதரவு தரும் வகையில் பயிற்சி, திறன் மேம்பாடு போன்றவற்றை ஊக்குவிக்கவும் ஏழு அமைச்சர்களும் கடப்பாடு தெரிவித்தனர்.
சாங்கி விமானப் போக்குவரத்து உச்சநிலை மாநாட்டின் முதல் நாளான நேற்று அமைச்சர்களின் அறிக்கை வெளியானது.
விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த தலைவர்களும் ஏழு நாட்டு அமைச்சர்களும் துறையின் வருங்காலம் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

