ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ('யுஏஇ') முன்னாள் அதிபர் ஷேக் காலிஃபா பின் சையது அல் நஹ்யானின் மறைவுக்கு, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த தலைவரின் சகோதரரும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தற்போதைய அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானிடம் திருவாட்டி ஹலிமா இரங்கல் தெரிவித்தார்.
காலஞ்சென்ற ஷேக் காலிஃபாவிற்கு அபுதாபியில் நடைபெற்ற அதிகாரபூர்வ இரங்கல் கூட்டத்தில் சிங்கப்பூர் சார்பாக அவர் கலந்துகொண்டார்.
அமரரான ஷேக் காலிஃபாவின் தலைமைத்துவத்தின்கீழ் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் வளப்பமும் நிலையான மேம்பாடும் அடைந்ததாகத் திருவாட்டி ஹலிமா ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
ஷேக் முகமதின் தலைமைத்துவத்தின்கீழும் சிங்கப்பூருக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் லீ சியன் லூங் சென்ற சனிக்கிழமை அனுப்பிய இரங்கல் செய்தியில் ஷேக் காலிஃபா தமது வாழ்வை அபுதாபி, ஐக்கிய அரபுச் சிற்றரசு ஆகியவற்றின் மக்களுக்குச் சேவையாற்ற அர்ப்பணித்தவர் என்று குறிப்பிட்டார்.

