சிங்கப்பூர் உள்ளிட்ட நான்கு நாடுகளில் இருந்து சோதனை அடிப்படையில் சுற்றுப்பயணிகளை அனுமதிப்பது குறித்து ஜப்பான் அறிவித்ததையடுத்து அதிகமானோர் அதன் தொடர்பில் விசாரிப்பதாகப் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய சுற்றுப்பயண அமைப்பு நேற்று முன்தினம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட இடங்களுக்கு சுற்றுலா வழிகாட்டியுடன்கூடிய குழுப் பயணங்களுக்கு மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்கும் என்று அறிவித்தது.
அறிவிப்பு வெளியான பிறகு 20க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்ததாக 'சிடிசி டிராவல்' நிறுவனம் கூறியது.
பெரும்பாலானோர் இந்த ஆண்டு இறுதியில் பயணம் செய்வது குறித்து விசாரித்ததாக அந்த நிறுவனம் குறிப்பிட்டது.
சிறிய குழுக்களாகப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகபட்சம் ஒன்பது பேர் கொண்ட குழுக்களுக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் 'சான் பிரதர்ஸ் டிராவல்' நிறுவனம் கூறியது.
ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்து ஜப்பானிய சுற்றுப் பயணங்களைத் தொடங்கவிருப்பதாகவும் 'சான் பிரதர்ஸ் டிராவல்' நிறுவனம் கூறியது.
இருப்பினும் சில பயணிகள் ஜப்பான் அதன் எல்லைகளை முழுதும் திறக்கும்வரை காத்திருக்க முடிவுசெய்துள்ளனர்.
குழுவாக, கட்டுப்பாடுகளுடன் செல்லாமல் தனிப்பட்ட முறையில் பயணம் செய்வதே இவர்களது விருப்பம். இந்த முயற்சியை வரவேற்ற 'ஜப்பான் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் பேச்சாளர், உள்ளூர்ப் பொருளியலுக்கு இத்தகைய நடவடிக்கை புத்துயிரூட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

