சிங்கப்பூரின் ஆகப் பெரிய குளிரூட்டும் கட்டமைப்பு 2025ஆம் ஆண்டுக்குள் அங் மோ கியோ வட்டாரத்தில் அமையவிருக்கிறது. தொழில்துறைக் கட்டடமான 'எஸ்டிமைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் டெக்னோபார்க்கில்' அது அமைக்கப்படவிருக்கிறது.
514 மில்லியன் வெள்ளி முதலீட்டில் இந்தக் கட்டமைப்பு அமைக்கப்படும். பொதுவான ஓரிடத்தில் தண்ணீர் குளிர்விக்கப்படும். பின்னர் அங்கிருந்து குழாய் வழியாகக் கட்டடங்களுக்கு குளிரூட்டப்பட்ட தண்ணீரை அனுப்பும் இத்தகைய கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது.
கென்ட் ரிட்ஜ், ஜூரோங் லேக், தெம்பனிஸ், மரினா பே ஆகிய வட்டாரங்களில் குளிரூட்டும் கட்டமைப்புகள் நிறுவப்படும் என்றும் கூறப்பட்டது.இத்தகைய கட்டமைப்புகள் மூலம் மின்சாரப் பயன்பாட்டையும் கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைப்பது இலக்கு.
அங் மோ கியோவில் அமையும் புதிய குளிரூட்டும் கட்டமைப்பு, ஆண்டுக்கு 20 விழுக்காடு வரை மின்சாரத்தைச் சேமிக்க உதவும் என்று கருதப்படுகிறது. ஆண்டுக்கு 120,000 டன் கரியமில வாயு வெளியேற்றத்தையும் அது குறைக்கும். கிட்டத்தட்ட 109,100 கார்களை சிங்கப்பூரின் சாலைகளில் இருந்து அகற்றுவதற்கு அது சமம்.
புதிய குளிரூட்டும் கட்டமைப்பு செயல்படத் தொடங்கியதும் நான்காயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை மறுபயனீடு செய்ய இயலும். சூரியசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்க அந்த இடம் பயன்படக்கூடும். எஸ்பி குழுமம் புதிய கட்டமைப்பை வடிவமைத்து, உருவாக்கி, நிர்வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் 'எஸ்டிமைக்ரோஎலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்துடன் அது புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.
உலகளாவிய நிலையில் 'எஸ்டிமைக்ரோஎலக்ட்ரானிக்ஸ்' நிறுவனம் இத்தகைய குளிரூட்டும் கட்டமைப்பை நிறுவுவது இதுவே முதல்முறை. 2027க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை வெகுவாகக் குறைப்பது அதன் இலக்கு.

