'செம்ப்மரின்' எனப்படும் 'செம்ப்கார்ப் மரின்' நிறுவனம் இந்த ஆண்டின் முற்பாதியில் மேம்பட்ட நிதி நிலைமையை எதிர்பார்க்கிறது. புதிய ஒப்பந்தங்கள் கைவசமானதும் தொழில்துறை நிலவரம் மேம்பட்டுவருவதும் அதற்குக் காரணங்கள்.
நிறுவனம் நேற்று வெளியிட்ட முதல் காலாண்டுக்கான இடைநிலை மதிப்பீட்டில் இந்த விவரங்களை வெளியிட்டது. 2022 நிதியாண்டுக்கான 12 வேலைத்திட்டங்களில் ஆறு நிறைவுபெற்றுவிட்டதாக அது குறிப்பிட்டது.
அண்மை வேலைத்திட்டங்களால் நிறுவனத்தின் பணப்புழக்கம் மேம்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. வேலைத்திட்டங்கள் படிப்படியாக நிறைவடையும் நிலையில் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களை மற்ற புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடிவதாக 'செம்ப்மரின்' கூறியது.
'மெர்ஸ்க்' நிறுவனத்திற்கான கடற்கரைக்கு அருகே காற்றாலையை நிறுவ உதவும் கப்பலுக்கான வடிவமைப்புப் பணிகளும் புதிய திட்டங்களில் அடங்கும்.
அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மூன்று, 'மெர்ஸ்க்' நிறுவனக் கப்பல்கள் ஒன்பது ஆகியவற்றின் பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்பிலும் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டதாக 'செம்ப்மரின்' தெரிவித்தது.

